அரசு பள்ளிகள் தனியார் மயம் : தலைவலிக்குத் தீர்வு காண தலையை வெட்றதா? - ராமதாஸ் கொதிப்பு
இந்தியாவில் சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்திருப்தற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாட்டில் சிறப்பாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது, தலைவலிக்குத் தீர்வு தலையை வெட்டுவது போன்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை!
மத்திய திட்ட ஆணையத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக்,' மூன்று ஆண்டுகளுக்கான செயல்திட்டம்' என்ற தலைப்பில் பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது.
அந்த ஆவணத்தில் தான் சரியாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்; அவ்வாறு ஒப்படைக்கப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
இந்தியாவில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாறாக தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவு
2010 -14 காலத்தில் 13,000 அரசு பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் 1.13 கோடி குறைந்துள்ளது. அதேநேரத்தில் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி அதிகரித்துள்ளது.
தரமற்ற கல்வியே காரணம்
ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்கு வராதது, வகுப்பில் கற்பித்தலுக்கு குறைந்த நேரமே செலவழிக்கப்படுவது, தரமற்றக் கல்வி ஆகியவையே அரசு பள்ளிகளின் இத்தகைய நிலைக்குக் காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான யோசனைகள்
அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து விட்டது என்பதையோ, அதற்காக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் சரியானவை என்பதையோ யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதற்கான தீர்வாக நிதி ஆயோக் முன்வைத்துள்ள யோசனைகள் தான் மிகவும் ஆபத்தானவை.
ஆரோக்கியமற்ற பரிந்துரை
அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து விட்டது என்றால், அதை மேம்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது அரசின் பணியாகும். மாறாக, அந்த பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்பது தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி ஓடுவதற்கு ஒப்பானதாகும். இது ஆரோக்கியமான பரிந்துரை கிடையாது.
சீர்திருத்தம் தேவை
தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகள் தலை சிறந்த விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும், சமூக சீர்திருத்தவாதிகளையும் உருவாக்கியிருக்கிறது. அத்தகைய சாதனைகளை படைப்பது இப்போதும் சாத்தியமானது தான். ஆனால், இப்போது அத்தகைய சாதனைகள் படைக்கப்படாமல், கல்வித் தரம் சீரழிந்து வருகிறது என்றால் அதற்கான சீர்திருத்தம் மேலிருந்து தொடங்க வேண்டுமே தவிர, பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலிருந்து தொடங்கக் கூடாது. அவ்வாறு செய்வது அபத்தத்தின் உச்சம்.
தானியார் மயமாக்க துடிப்பது ஏன்?
இந்த சீரழிவுகளைக் களைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்தால் அத்துறையின் அமைச்சர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிபந்தனை விதித்தால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் நிச்சயமாக உயரும். இதை விடுத்து அரசு பள்ளிகளை தனியார்மயமாக்கத் துடிப்பது முறையல்ல.
நிதி ஆயோக்கை கலையுங்கள்
மத்தியில் திட்ட ஆணையம் இருந்த வரை புதிய அரசு பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது போன்ற ஆக்கப்பூர்வ யோசனைகளை செய்து வந்தது. ஆனால், நிதி ஆயோக் அமைப்போ எதிர்மறையான யோசனைகளை வழங்கி வருகிறது. சீரழிவுக்கு வழி வகுக்கும் அந்த அமைப்பை கலைக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.