தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து ராசியானது பா.ம.க.!!
சென்னை: பரம வைரியாக இருந்த வந்த பாமகவும் தேமுதிகவும் இன்று ராசியாகிக் கொண்டன. சென்னையில் ராஜ்நாத் சிங்கை சந்திக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வட தமிழகத்தில் பாமக கோட்டை கட்டாமலேயே செல்வாக்குடன் இருந்து வந்தது. ஆனால் தேமுதிக என்ற கட்சி உதயமானதும் அதன் செல்வாக்கே வடமாவட்டங்களில்தான் அதிகம் என்ற நிலை உருவானது. பாமகவின் பெல்ட் தொகுதிகளில் ஒன்றான விருத்தாசலத்தில்தான் விஜயகாந்தும் முதல் வெற்றியைப் பெற்றார்.
இப்போது விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருக்கும் ரிஷிவந்தியமும் பாமக பெல்ட்தான். இதனாலேயே நடிகர் கட்சி என்று பாமக தலைவர்களால் ஏளனம் செய்யப்பட்டது தேமுதிக. லோக்சபா தேர்த்லுக்கான பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டிலும் கூட தேமுதிகவும் பாமகவும் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றன.
இதனால்தான் சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ், சிங்கங்கள் சிறுநரிகளிடம் பிச்சை கேட்பதோ? என்று கர்ஜித்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று ராஜ்நாத்துடன் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர்.
சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சால்வை அணித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து இந்த இரு கட்சிகளும் ராசியாகிக் கொண்டு பாஜக அணியில் இணைந்தன.