முதல்வருடன் சந்திப்பா?: தவறான செய்தி- கடுமையாக மறுக்கிறார் பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார்
திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் வரவில்லை.
இதைத் தொடர்ந்து செஞ்சி கணேஷ்குமார் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதை ஒன் இந்தியா தமிழ் இணையதளமும் கடந்த 24-ந் தேதி பதிவு செய்தது.
ஆனால் இந்த செய்தியை செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் முழுமையாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், திண்டிவனம் செயற்குழுக் கூட்டத்துக்கு சில சொந்த வேலைகள் காரணமாகவே நான் செல்லவில்லை. இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ஐயா, சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு தெரிவித்தேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு எனக்கு அனுமதி தந்தனர்.
ஆனால் இது குறித்து என்னிடம் எந்த கருத்து கேட்காமல் என் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னால் சட்டமன்றத்தில் வைத்தே முதலமைச்சரை சந்தித்து தொகுதி நலன் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் மனு கொடுக்க முடியும். இதனால் நான் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக எப்படி கூற முடியும்?.
இந்தச் செய்தியை வெளியிட்டபோது எனது கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறு.
அணைக்கட்டு எம்.எல்.ஏ. கலையரசன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த செய்தியுடன் என்னை தொடர்புபடுத்தி வெளியான செய்தி ஏற்கத்தக்கதே அல்ல.
இந்தச் செய்தி உள்நோக்கத்துடனும் என் வளர்ச்சியை தடுக்கும் வகையிலேயும் வெளியிடப்பட்டவை. இதை நான் கடுமையாக மறுக்கிறேன் என்றார்.