ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை விடுங்க.. கரூரில் நடக்கும் போட்டா போட்டியைப் பாருங்க!
கரூர்: கரூரில் சுவர் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டா போட்டி தொடங்கியுள்ளது. குறிப்பாக பாமகவினர் பெரிய சுவர் எதையும் விடாமல் தொடர்ந்து பிடித்து விளம்பரம் எழுதி வருகின்றனர்.
2016 சட்டசபைத் தேர்தலில், ஓவ்வொரு முன்னணி கட்சியினரும், யாருடன் கூட்டணி அமைத்து தற்போது பலமாக உள்ள அ.தி.மு.க வை எதிர்த்து எவ்வாறு வெற்றி அமைப்பது என்று யோசித்து வருகின்றனர்.
மறுபக்கம் தனியாக களம் கண்டு வரும் பாமக மக்கள் பலத்தையும், டாஸ்மாக் எனும் மது அரக்கனை எதிர்க்கும் போராட்டத்தையும் மட்டும் நம்பி தேர்தல் களத்தில் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறது.
தமிழக அரசியல் கட்சிகளில் முதல்வர் வேட்பாளர் என்று முதல் முறையாக அறிவித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக களத்தில் இறங்கியுள்ளது. மண்டல மாநாடுகளையும் அது தீவிரமாக நடத்தி வருகிறது.
அன்புமணி
கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பொதுக்குழு எடுத்த தீர்மானத்தின் படி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பா.ம.க முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை பா.ம.க அறிவித்தது.
மாவட்டந்தோறும் விசிட்
இதைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி, ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறார். அரசு செயல்படுத்த முடியாத திட்டங்கள் குறித்து ஆலோசித்து அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை செய்தியாளர்கள் வாயிலாகவும், பா.ம.க கூட்டங்கள் வாயிலாகவும், சொல்லி வருகிறார். பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசி வரும் அவர் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
பஸ்ஸைச் தள்ளி விட்டு பிரச்சாரம்
அது மட்டுமல்லாமல், மக்களைக் கவரும் செயல்களிலும் அவர் ஆங்காங்கு ஈடுபடுகிறார். ஓடாமல் நிற்கும் அரசுப் பேருந்தை தள்ளி விடுவது, பள்ளி, கல்லூரி பகுதிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தையும், மதிய உணவின் தரத்தை பற்றி ஆராய்வது என்று செயல்படுகிறார்.
சுவர் விளம்பரம்
இது ஒரு புறம் இருக்க கரூர் மாவட்டத்தில் பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் ஏராளமான பா.ம.க வினர் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மண்டல மாநாடுகள்
ஜூலை 12 ம் தேதி கோவையில் பா.ம.க சார்பில் கொங்கு மண்டல மாநாடும், ஜூலை 17 ம் தேதி வேலூர் மண்டல மாநாடு, ஆகஸ்ட் 9 ம் தேதி மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு, ஆகஸ்ட் 23 ம் தேதி விழுப்புரம் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான விளம்பரங்களை எழுத சுவர்களைப் பிடித்து வருகின்றனர்.
சோர்வில் அதிமுகவினர்
எப்போதுமே கரூரை பொறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம்தான் பெரும்பாலான சுவர்கள் இருக்கும். ஆனால் தற்போது அவர் ஆர்.கே.நகர் சென்று விட்டதால் அதிமுகவினரும் தொய்வாக உள்ளனர். இதைப் பயன்படுத்தி பாமகவினர் சுவர்களை வளைத்து வருகின்றனர்.
இப்போதே
தமிழகத்தையே கலக்கும் சென்னை ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ம.க வினர் 2016 தேர்தலுக்காக தற்போதே தேர்தல் வியூகத்திற்கு சுவர் விளம்பரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
எப்பவோ தயார்
இந்நிலையில் கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுவர் விளம்பரத்தை ஆய்வு செய்த மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கேட்ட போது., 2016 சட்டமன்ற தேர்தலுக்காக நாங்கள் எப்போதோ தயாராகி விட்டோம். இருப்பினும் சுவர் விளம்பரங்களையும் மக்களிடம் அனுமதி பெற்று எங்களது மாநாட்டிற்காக தற்போதே சுவர் விளம்பரம் செய்து வருகிறோம்.
பூரண மது விலக்கு வரும்
வரும் 2016 பா.ம.க ஆட்சி அமைப்பது உறுதி, என்பதை எங்களது தொண்டர்கள் மத்தியில் தற்போதே தெரிகிறது. இருப்பினும் மக்கள் எங்களது கட்சியின் கொள்கைகளை தெரிந்து கொண்டு வருகிறது. பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வருவதே எங்களது முதல் கையெழுத்து என தெரிவித்தார்.