உள்ளே.. வெளியே.. 'மங்காந்தா' ஆடும் பாமகவின் நிர்வாகக் குழு நாளை கூடுகிறது!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாமக இடம் பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு நாளை கூடி ஆலோசனை நடத்துகிறது.
லோக்சபா தேர்தலில் தேசியக் கட்சி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது பாமக. பின்னர் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து கொண்டு சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியது.
அதே ஜோரில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை முடுக்கிவிட்டது பாமக. ஆனால் திடீரென பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பாமக. அந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் அறிவித்த 10 வேட்பாளர்களை திரும்ப பெற முடியாது. அந்த தொகுதிகளை விட்டே கொடுக்க முடியாது என்று பிடிவாதம் காட்டியது பாமக.
ஆனால் பாமகவின் 10 தொகுதிகளில் 9ஐ பாஜகவும் தேமுதிகவும் கேட்டு அடம்பிடித்தன. இதனால் பாமக அக்கூட்டணியில் இடம் பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நாளை (6-ந்தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு ஜி.கே. மணி அதில் கூறியுள்ளார்.