பாமக வேட்பாளராக விருப்பமா?.. நாளை முதல் விருப்ப மனு தரலாம்.. கட்டணம் ரூ. 5000 மட்டுமே!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக ஆகியவை விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்து விட்டன. அடுத்து பாமகவும் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெறவுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நாளை 27ம் தேதி புதன்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் நாளை புதன்கிழமை முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00மணி முதல் மாலை 6.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.
மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்சிகள் தவிர பிற கட்சிகள் யாருடனாவது கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட வேண்டிய நிலையில் இருப்பதால் அவை இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.