அது கிடக்கிறது கூட்டணிக் குழப்பம்.. 10 தொகுதிகளிலும் பிரசாரத்தை முடுக்கி விட்ட பாமக
சென்னை: இன்னும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் படாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. கட்சிகளின் தெளிவான கூட்டணி விவரங்கள் இன்னும் தெரிவிக்கப் படவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளிலும் பா.ம.க. மட்டும் தனது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பா.ம.க தனது பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம், தேர்தல் களப்பணி மறுபுறம் என நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது பா.ம.க..
10 தொகுதிகளில்....
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று அறிவித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. போட்டியிட இருக்கும் 10 தொகுதிகளையும், அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
வேட்பாளர்கள் விவரம்...
அதன்படி, சேலம்- ஆர்.அருள், ஆரணி - ஏ.கே.மூர்த்தி, கிருஷ்ணகிரி - ஜி.கே.மணி, கடலூர் - டாக்டர் கோவிந்தசாமி, அரக்கோணம் - ஆர்.வேலு, மயிலாடுமுறை - அகோரம், திருவண்ணாமலை - எதிரொலிமாறன், சிதம்பரம் - கோபி, விழுப்புரம் - வடிவேல் ராவணன், பாண்டிச்சேரி - அனந்தராமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர பிரச்சாரம்...
பா.ம.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீடிக்கும் கூட்டணி குழப்பம்...
தமிழக அரசியல் களத்தில் கூட்டணியை மற்ற கட்சிகள் முடிவு செய்யாத நிலையில், பா.ம.க. மட்டும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணியா...?
இதற்கிடையே திடீர் திருப்பமாக பா.ஜ.கவுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கும் சூழல் உருவானது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி பங்கீடு குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.
10ம் வேணும்....
இதற்கு காரணம், பா.ம.க. தாங்கள் ஏற்கனவே அறிவித்த 10 தொகுதிகளையும், தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 3 தொகுதிகளையும் கேட்பது தான் எனத் தெரிகிறது. இதற்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மறுபக்கம் தாங்கள் அறிவித்த 10 தொகுதிகளிலும் பா.ம.க. தீவிர தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகிறது.
10ல் 5ஆவது ....
பென்னாகரம் இடைத்தேர்தல் போன்றே செயல்பட்டு, 10 தொகுதிகளில் குறைந்தப்பட்சம் 5 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்பதே பா.ம.க. திட்டம். இதற்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவினர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரிய, சிறிய ஊர்களை கணக்கெடுத்து அந்தெந்த ஊர்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ஆலோசனை....
தேர்தல் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது பா.ம.க. அதன்படி, பா.ஜ.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், தாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை விஷயங்கள் குறித்தும், பெரிய கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து, வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்தும் பா.ம.க. ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.