வெற்றிடத்தை எப்போது நாங்கள் நிரப்புவோம் என்று மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர் - அன்புமணி
சென்னை: ஜெயலலிதா சிறை சென்றுள்ளதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்ப, பா.ம.க-வைத்தான் பொதுமக்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசும்போது, ''இன்றைய அரசியல் சூழ்நிலையால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடமும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை பா.ம.க.தான் நிரப்பும் என்று பொதுமக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 47 ஆண்டு காலமாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சி புரிந்துள்ளன. தற்போது பா.ம.க-வைத்தான் பொதுமக்கள் பெரிய ஏக்கத்துடன் பார்த்து கொண்டுள்ளனர்.
அம்மா குடிநீர், அம்மா உணவகம் உள்பட அம்மாவின் அனைத்தும் முடிந்து விட்டது. மக்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைக்க வேண்டும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை நமது நிர்வாகிகள் பயன்படுத்தி கொண்டு கட்சியையும், அமைப்பையும் பலப்படுத்த வேண்டும். மேலும், உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்றார்.