ஐடி ரெய்ட்.. அடுத்தடுத்து நீளும் ஆக்டோபஸ் கரங்கள் - சிக்கப் போகும் பெரும் தலைகள்
அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ரெய்ட் நடந்தது போல போயஸ் கார்டனுக்குள்ளும் ஐடி துறையினர் ரெய்ட் நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டு வேட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டோடு நிற்கப் போவதில்லை என்றும், மேலும் பல அமைச்சர்கள், ஏன் போயஸ்கார்டன் வரை கூட நீளும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரையில் ரூ. 4.5 கோடி பணம், நகை, ரூ.89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருமான வரி சோதனை இதோடு நிற்காது என்றும் சசிகலா குடும்பத்தினர், அமைச்சர்கள், ஏன் போயஸ்கார்டனுக்குள்ளும் ஐடியின் ஆக்டோபஸ் கரங்கள் நீளும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை இரவே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அலெர்ட் கொடுக்கப்பட்டது. ஸ்பாட் பற்றி சொல்லாமல் "பட்டாசு வெடிக்க"ப் போவதை பற்றி மட்டும் ஹிண்ட் கொடுத்து விட்டு நிறுத்திவிட்டனர். 4 மணிக்கு தயாரா இருங்க ஸ்பாட்டுக்குப் போகனும் என்று மட்டுமே கூறப்பட்டது. சென்னையே அமைதியாக இருக்க படு அமைதியான பாதுகாப்பு நிறைந்த ஏரியாவை நோக்கி வருமான வரித்துறையினரின் கார்கள் சென்று நின்ற இடம் காவேரி.

அதிரடி ரெய்டு
இது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடாச்சே... இங்குதான் பட்டாசு வெடிக்கப் போகிறோமோ என்று யோசித்து உள்ளே நுழைந்து சரசரவென பணியை ஆரம்பித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நடப்பது என்ன என்று யோசிக்க கூட நேரமில்லை. அவரது என்னமெல்லாம் உலக சுகாதார தினமான வெள்ளிக்கிழமை மதியம் ஜனாதிபதி கையால் விருது வாங்குவதைப் பற்றி மட்டுமே இருந்தது.

ரெய்டு ஏன்?
வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்த வருவார்கள் என்று அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். இந்த ரெய்டு ஏதோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை வைத்து மட்டுமே நடத்தப்பட்டதல்ல. விஜயபாஸ்கர் மீது கடந்த சில ஆண்டுகளாகவே அனுப்பப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்டது.

விஜயபாஸ்கர் வீடு
விஜயபாஸ்கர் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் என்று டிடிவி தினகரன் கூறினாலும், அவர் எப்படி இந்த அமைச்சர் பதவியை பிடித்தார் என்பதை தமிழகமே அறியும். சட்டசபையில் பட்டாசு கவிதை படித்து ஜெயலலிதாவை சிரிக்க வைத்து அமைச்சரவையில் இடம் பிடித்தார். இப்போது அவரது வீட்டிலேயே அதுவும் உலக சுகாதார தினத்தன்று குறி வைத்து பட்டாசு வெடித்து விட்டனர்.

கமிஷன் கந்தசாமிகள்
சுகாதாரத்துறையில் பணியிடங்கள் நிரப்புவது, டிரான்ஸ்பர்கள் வாங்குவது, அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் வாங்குவது என அனைத்திலும் கமிஷன், கட்டிங் பார்த்து விடுவாராம் விஜயபாஸ்கர். இவரை வைத்து பலனடைந்தவர்கள் யார் யார் என்று பார்த்தே ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

சிக்கிய ஆவணங்கள்
அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ. 4.5 கோடி பணம், நகை, ரூ.89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டை தொடரும்
இந்த ஐடி ரெய்டு இதோடு நிற்கப் போவதில்லையாம். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி என சசிகலாவிற்கு சலாம் போட்ட அனைவரின் வீடுகளிலும் நடைபெறுமாம். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் வளைத்து விட்டு போயஸ்கார்டன் வரை வருமான வரித்துறையின் ஆக்டோபஸ் கரங்கள் நீளும் என்று ஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி அடுத்தடுத்து பட்டாசு வெடிக்கலாம் என்கின்றனர் ஐடி அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications