கருணாநிதியைப் போட்டோ எடுப்பது அவ்வளவு பெரிய குற்றமா??
சென்னை: தி்முக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்ததைப் புகைப்படம் எடுக்க விடாமல் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை போலீஸார் இன்று தடுத்த செயல் பத்திரிகையாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. ஒரு போட்டோ எடுப்பதில் என்ன வந்து விடும் என்று பத்திரிகையாளர்கள் குமுறியுள்ளனர்.
ஜெயலலிதாவின் முதல்வர் பதவி போய் விட்டது. எம்.எல்.ஏ பதவியும் போய் விட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அரசின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் நடந்த இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் அதிமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட சட்டசபையில் முதல்வருக்கான இருக்கையில் அமரவில்லை, தனது பழைய நிதியமைச்சர் இடத்திலேயே அமர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். கருணாநிதி சட்டசபைக்கு வருவது குறித்து கடந்த சில நாட்களாகவே பரபரப்பு நிலவி வந்தது. அவருக்கு சிறப்பு இருக்கை வசதி செய்து தர வேண்டும். அப்படிச் செய்து கொடுத்தால் அவர் விவாதம் புரிய ஏதுவாக இருக்கும் என்று திமுகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களும் கூட கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் சட்டசபைக்கு வருவது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், கருணாநிதிக்கும் இடையே அறிக்கைப் போரும் கூட நடந்தது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். இதனால் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் பரபரப்பாகினர். அவரைப் புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் முயன்றனர்.
ஆனால் அதற்குத் தடை விதித்து போலீஸார் படம் எடுக்க விடால் தடுத்து நிறுத்தினர். இதனால் புகைப்படக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளும், காரசாரமான வாக்குவாதமும் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரின் இந்த செயல் பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி வந்ததை ஏன் படம் எடுக்க விடாமல் போலீஸார் தடுக்க வேண்டும் என்று அவர்கள் குமுறியுள்ளனர். ஜெயலலிதா இல்லாததால் அதிமுக அரசின் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் பொலிவிழந்துள்ளது. எனவே கருணாநிதி, விஜயகாந்த் என்று எதிர்க்கட்சியினர் மீதுதான் பரபரப்பு இடம் மாறியுள்ளது. எனவே இவர்கள் வருவது முக்கியச் செய்தியாகியுள்ளதால், இவர்களை வைத்தே பத்திரிகை தலைப்புச் செய்திகள் அமையும் என்று அரசு அஞ்சுகிறது. எனவேதான் எங்கே கருணாநிதி வந்ததை படம் எடுத்து அதைப் பெரிதாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீஸாரை விட்டு புகைப்படம் கூட எடுக்க விடாமல் அரசு தடுத்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதுவரை சட்டசபை வளாகத்தில் யாரையும் புகைப்படம் எடுக்க விடாமல் போலீஸார் தடுத்ததில்லை. ஆனால் அதிமுக போலீஸார் இன்று தடுத்த செயல் பரபரப்பையும், அதிருப்தியையும் கிளப்பி விட்டுள்ளது.
சிறு போராட்டத்துக்குப் பின் அனுமதித்த போலீஸ்:
தமிழக சட்டசபை வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரின் செயலைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து இறங்கி வந்த போலீஸார், கருணாநிதி வருவதை புகைப்படம் எடுக்க அனுமதி அளித்து விலகினர்.