மகனை கொலை செய்ததாக எழுத்தாளர் 'சீவலப்பேரிபாண்டி' செளபா கைது
மகனை கொலை செய்த வழக்கில் எழுத்தாளர் செளபா கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மதுரை: மகனை கொலை செய்ததாக சீவலப்பேரிப் பாண்டி திரைப்படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான செளபா கைது செய்யப்பட்டுள்ளார்.
செளபாவும் அவரது மனைவி லதா பூரணமும் 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகன் விபின் (வயது 27), தாய் மற்றும் தந்தை வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செளபா மீது சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர், பணத் தகராறில் தாம் சுத்தியால் அடித்ததில் மகன் இறந்ததாகவும் அவனது உடலை கொடைரோடு அருகே உள்ள தோட்டத்தில் புதைத்ததாகவும் செளபா ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் செளபாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செளபா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
போதைக்கு அடிமையான மகன்
செளபா குறித்து பழம்பெரும் பத்திரிகையாளர் ஏ.பி. ராமன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சவுபா என்கிற சவுந்திரபாண்டி விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் பத்திரிகையாளராக இருந்து இந்த மதுரை மண் குறித்து நிறைய எழுதியவர். குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யும் குறிப்பிட்ட சமூகம் குறித்து முதன் முதலில் விரிவாக எழுதியவர். கருத்தம்மா படத்தின் மூலக் காரணி இவர்.
இவர் எழுதியதால்தால் பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு தொட்டில் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அடுத்து 10 வயது 12 வயது பச்சிளம் குழந்தைகளை வரதட்சணை கொடுக்க முடியாமல் இளம் வயதில் திருமணம் செய்து கொடுக்கும் சிறார் திருமணம் குறித்து எழுதியவர். அதில் உச்ச கட்ட கொடுமையாக குழந்தை வயசுக்கு வருவதற்காக பெண் பிள்ளையை பெற்றவர்கள் பிறப்புறுப்பில் எறுக்கம் பாலை ஊற்றி செயற்கை முறையில் வயசுக்கு வர வைப்பதை ஜூவியின் அட்டைப் பக்கத்தில் கவர் ஸ்டோரியாக எழுதிய போது தமிழகமே அதிர்ந்தது.
ஒரு வெள்ளை ரோஜாவின் மேலே ஒற்றை முள் குத்தி அந்த இதழ் வழியே ரத்தம் சொட்டுவதாக படம் வரைந்து அட்டைப்பக்க கட்டுரையாக ஜுவி வெளியிட்டது. இப்படி ஏகப்பட்ட உண்மையான சம்பவங்களை எழுதிய மிகப் பெரிய ஊடக ஜாம்பவான். இதன் பிறகு அரசு மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இது போல பளியர்கள் வாழ்க்கை, குண்டுப்பட்டி கலவரம் என ஏகப்பட்ட ஏரியாக்களை இந்த உலகுகிற்கு வெளிச்சம் போட்ட நேர்மையான பத்திரிகையாளர்.
இன்று ஊடகத்துறையில் எடிட்டராக இருக்கும் பெரும்பாலான ஆட்களுக்கு சவுபாதான் குரு. இது அவரது குடும்பத்தில் நடந்த கோரமான நிகழ்வு. அவர் தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். மறவர் சமூகத்தை சேர்ந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த இரு சமூகம் குறித்து உங்களுக்கு நன்கு தெரியும். திருமணம் ஆனதில் இருந்து பிரச்னை மேல் பிரச்னை. அவரது மகன் பிறந்த பிறகு கொஞ்ச நாட்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தந்தையிடம் தாயிடம் சிறிது சிறிது காலமாக வாழ்க்கையை ஓட்டிய அவரது மகன் லயோலோ கல்லூரியில் படித்தார். படிக்கும் போதே சேர்க்கை சரியில்லாமல் கெட்ட சகவாசங்களை வளர்த்தார். போதை, பெண் விவகாரம், பிரபல தாதாவுடன் மோதல், பல்வேறு பிரச்னை என நித்தமும் அவரது தந்தைக்கு ஏகப்பட்ட பிரச்னை.
மகனுக்காக எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டபோதும், ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார். சர்க்கரை ,இதய நோயினால் பாதிக்கப்பட்ட சவுபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார். கடந்த மாதம் அவரது அம்மாவை அடித்து தலையில் தீயை வைத்துள்ளார் அவரது மகன். ஒவ்வொரு மாதமும் உழைக்காமல் அப்பாவிடமும் , அம்மாவிடமும் பணத்தை வாங்கி ஊதாரியாக சுற்றியதோடு தாய் தந்தையரை மிக மோசமாக நடத்தி வந்துள்ளார்.
இதனால் பயங்கர அப்செட்டில் இருந்துள்ள சவுபா இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பத்திரிகையாளராக இந்த சமூகத்தை மாற்றி அமைத்ததில் மிகப் பெரிய பங்கு சவுபாவிற்கு உண்டு. சவுபாவின் எழுத்துகள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றங்களை விதைத்து அரசினை செயல்பட வைத்துள்ளது.
ஆனால் அவரது சிந்தனை ,உழைப்பும் எழுத்தும் அவருக்கு பயன் தராமல் போய் விட்டது. அவரது குடும்பச் சூழல் ,பிள்ளையை அதிக செல்லம் கொடுத்து கண்டிக்காமல் வளர்த்தது இப்போது காவல் நிலையம் வரை கொண்டு வந்துள்ளது.
விகடனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் அவரது குடும்பத்தில் உண்டான மனக் கசப்பில் சவுபாவை தத்து பிள்ளையாக பாவித்து அவரது கடைசி காலங்களில் சவுபாவின் தோட்டத்தில் சிறிது காலம் அவரது மனைவியுடன் இருந்த போது இந்து ராம்தான் மீண்டும் பாலசுப்பிரமணியத்தை அழைத்து போயஸ் கார்டனில் குடி வைத்தார். இது கடந்த கால வரலாறு.
பாரதிராஜா, இளையராஜா, சமுத்திரக்கனி, பாலா, கரு.பழனியப்பன், ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் என்று இவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியல் மிக நீளம். இவர்கள் அனைவரும் சவுபாவின் தோட்டதில்தான் கூடி கழித்த நாட்கள் மிக அழகானவை. அந்த தோட்டம் இன்று ஒரு உயிரை அதுவும் பெற்ற மகனையே விழுங்கி இருக்கிறது என்றால் நினைக்கையிலே மயிர் கூசச் செய்கிறது.
மிகச் சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர், சிந்தனைவாதி இன்று விசாரணை ,சிறைக் கொட்டடியில் நிற்கிறார் என்பதை நினைக்கையில் உறவுச் சிக்கல், அதன் பின் எழும் பிரச்சினைகள் எவ்வளவு கொடூரமானது என நினைக்கத் தோன்றுகிறது.
இவ்வாறு ஏ.பி. ராமன் பதிவு செய்துள்ளார்.