சென்னையில் பேரிகார்டை இழுத்து கொண்டே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது
சென்னையில் ஆபத்தான முறையில் பைக்ரேஸில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை கடற்கரை சாலையில் சாலை தடுப்புக்கான பேரிகார்டை இழுத்தபடியே பைக்ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, காந்தி மண்டபம் சாலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் பைக் ரேஸ் கும்பல் ஒன்று சாலை தடுப்புக்கு வைத்திருந்த பேரிகார்டை இழுத்தபடி ஓட்டிச் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இத்தகைய பைக் ரேஸ் கும்பலால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் இவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து இக்கும்பலைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து சிக்னல்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பைக் ரேஸ் கும்பலை அடையாளம் கண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது இக்கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் முத்துவேல், ஃபாரூக், பரத் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆவர். அவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.