கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து சசி அடியாட்கள் விரட்டியடிப்பு- எம்.எல்.ஏ.க்கள் வெளியேற கெடு
கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து சசிகலா அடியாட்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் எம்.எல்.ஏக்கள் உடனே வெளியேறவும் போலீஸ் கெடு விதித்துள்ளனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து சசிகலாவின் குண்டர்படையினரை அதிரடிப்படையினர் விரட்டியடித்தனர். அத்துடன் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 3 மணிக்குள் உடனே வெளியேறவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தம்மைத்தான் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக சசிகலா அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்தார். மன்னார்குடி குண்டர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இந்த சிறையில் இருந்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் மாறுவேடத்தில் தப்பினார். அவர் டிஜிபியிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த விசாரணைக்கு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் நுழைந்து அணிவகுப்பு நடத்தினர். அங்கு சசிகலாவின் குண்டர்களை அடித்து விரட்டினர். பின்னர் எம்.எல்.ஏ.க்களிடம் ரிசார்ட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் எம்.எல்.ஏக்களோ ரிசார்ட்டை விட்டு வெளியேர போவதில்லை என அடம்பிடித்து வருகின்றனர். இதனால் கூவத்தூரில் பதற்றம் நிலவி வருகிறது.