சிறுவர்கள் மது குடிக்கும் காட்சிகள் வந்தால் கேஸ் போடுங்க.. ஹைகோர்ட் அதிரடி
சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானால், அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருமுல்லைவாயலில் ஒரு வீட்டின் 'கார் பார்க்கிங்' பகுதியில் விதிமுறைகளை மீறி மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசியல்வாதிகள் போலில்லை
அப்போது இதுதொடர்பாக அரசு வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் தினந்தோறும் நடத்திவரும் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது; அரசியல் கட்சிகளைப்போல அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை என்றனர்.

வாக்குறுதி என்ன ஆனது?
மதுவுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி பெற்று போராடுகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும் என்றும் நீதிபதிகள் கூறினர் படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

மதுவுக்கு அடிமையாகும் சிறுவர்கள்
சமுதாயத்தில் மதுபானம் விஷம் போல கலந்துவிட்டது. பள்ளி சிறுவர்கள் பஸ், ஏறி இறங்கும் இடத்தில் கூட மதுபான கடைகளும், பார்களும் உள்ளன என்றும் நீதிபதிகள் சாடினர். சமீபகாலமாக சிறுவர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இலக்கு நிர்ணயித்து விற்பனை
அதுபோன்ற காட்சிகள் வெளியானால், போலீசார் தாமாக முன்வந்து அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Recommended Video


தீபாவளிக்கு எவ்வளவு டார்கெட்?
தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு மது விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை என்றார்.

20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து, திருமுல்லைவாயலில் கார் பார்க்கிங் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது குறித்தும், மதுகடைக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்டோர் நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications