சென்னை ஆயுதப்படை போலீஸ் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா?
சென்னையில் ஆயுதப்படை போலீஸார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
சென்னை: ஜெயலலிதா சமாதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டதில் பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் மதுரையை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் அருள். இவர் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்று சென்னை காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் விசாரணை நடத்தினார்.
விடுப்பில்லாமல் பணி
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள காவல்துறையினர் 8 மணி நேரத்துக்கும் மேலாக பணியில் உள்ளனர். ஊரை விட்டு ஊர் வந்து கொடுக்கும் இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடும்பத்தினரை பார்க்கக் கூட விடுப்பு அளிக்கப்படுவதில்லை என்பது குற்றச்சாட்டு.
முன்னாள் காவல்துறையினர்
8 மணிநேர பணி, வாரத்தில் ஒருநாள் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவல் துறையினர் கடந்த ஆண்டு தலைமை செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அரசு செவி சாய்க்கவில்லை.
நியமனம் இல்லை
தமிழகத்தில் பெரும்பாலான காவல் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கையை காட்டிலும் மிக மிக குறைவான அளவிலேயே காவலர்கள் உள்ளனர். பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் பரவலான குற்றச்சாட்டாகும்.
பணிச் சுமை
சிறிதும் ஓய்வின்றி விடுப்பின்றி பணியாற்றும் காவலர்கள் இதை சகித்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் ராணுவம், துணை ராணுவம், சிஆர்பிஎஃப் வீரர்களிடையே நடைபெற்று வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கவுன்சலிங்
இதுபோல் மன அழுத்தத்தில் உள்ள காவலர்களை அடையாளம் கண்டோ அல்லது அத்தனை காவலர்களுக்குமோ மன நல ரீதியில் கவுன்சலிங் கொடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் காவலர்களும் மனிதர்களே ரோபோக்கள் அல்ல அவர்களுக்கு மனம் உண்டு என்பதை உணர்ந்து 8 மணி நேர வேலை, கட்டாய வார விடுப்பு ஆகிய கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.