மெரீனா கடற்கரை சாலையில் காவலருக்கு அடி உதை- இருவர் தப்பி ஓட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அடித்து உதைத்துவிட்டு தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை மெரீனா கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனால், மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இன்று மாலை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்யா, அவர்களை தடுத்து நிறுத்தி அந்த சாலையில் செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பைக்கில் வந்த நபர்கள் இரண்டு பேரும் காவலர் சத்யாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த காவலர் சத்யா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மெரீனா கடற்கரையில் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.