மக்கள் மனதில் ஆனந்த மழையை பெய்வித்த காவல்துறையினர்.. கிரேட் சல்யூட்!
சென்னை: சென்னையில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..
மக்களை காப்பாற்றுவதில் எங்களுக்கும் பங்குள்ளது என்று களமிறங்கிய காவல்துறையினர் மக்களின் மனதில் ஆனந்த மழையைப் பெய்வித்துள்ளனர்.
தமிழகத்தில் வலுபெற்றுவரும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் சென்னை நகரம் பெறும் கசப்பான நிகழ்வை சந்தித்துள்ளது. கடந்த 3 நாட்களாக மக்கள் அன்றாடபணிகளை செய்யமுடியாமல் தவித்து தள்ளாடி வருகின்றனர்.
திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர்
ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், நிம்மதியாக தூங்க முடியாமலும், தண்ணீரால் வீடுகள் சூழப்பட்டுள்ளது. வேப்பேரி, ஈ.வெ.ரா. சாலையில் கார்ப்பரேஷன் ஊழியர்களே தயங்கும் நேரத்தில், ஒரு காவல்துறை ஆய்வாளர் அசத்தலாக செயல்பட்டார்.
சாக்கடை அடைப்பை சரி செய்தார்
ஆய்வாளர் பதவியை கூட நினைக்காமல் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மழை நீர் தேங்குவதற்கு காரணமான கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் கையுறை கூட அணியாமல் தனது கைகளை பயன்படுத்தி நீர் அடைப்பினை சரிசெய்த வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமாரே அவர்.
துணை ஆணையர் ராஜேந்திரன்
அதேபோல கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் ஒருபக்கம் களத்தில் இறங்கி சாலைகளில் தேங்கிய நீரை அகற்றிடும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
மறுபக்கம் இணை ஆணையர்
இதே போன்று தி.நகர் துரைசாமி சப்வே பாலத்தில் நள்ளிரவு வாகணங்கள் செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், திநகர் காவல்துறை இணை ஆணையாளர் அரவிந்தன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் சேர்ந்து துரிதமாக செயல்பட்டு தேங்கிய தண்ணீரை அகற்றி அதிகாலையில் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
காவல்துறைக்கு கிரேட் சல்யூட்
ஆங்காங்கே சாலையில் தலைசாய்த்துக் கிடந்த மரங்களை இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தி, மின்கம்பங்களை சீரமைத்து, சாக்கடைகளின் அடைப்புக்களை அகற்றி அப்பப்பா மக்களின் துயரத்தினை போக்குவதில் தங்களையும் இணைத்துக்கொண்டு களம்கண்ட காவல்துறையினரை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு கிரேட் சல்யூட் வைத்து.