உளவுத்துறை எச்சரிக்கை: சென்னை ரயில் பேருந்து நிலையங்கள் மால்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகருக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ரயில் -பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக ரயில், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதிகள் செயல்பட திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் முதல் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட வணிக வளாகங்கள் அனைத்திலும் தனியார் பாதுகாவலர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜுகளிலும் சோதனையும், பாதுகாப்பு நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.