தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு புரட்சி நடந்த இடங்களில் போலீஸ் கண்காணிப்பு!
மெரினா உள்பட ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்த இடங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் அதைத் தடுக்கும் வகையில் மெரினா உள்பட ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்த இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா. அவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். அவரது கட் ஆஃப் 196.75 ஆகும். எனினும் நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்கள் பெற்றார்.
பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார் இந்த ஏழை மாணவி. எனினும் உச்சநீதிமன்றமும் கைவிரித்தது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தை உலுக்கியது
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

35 மாவட்டங்களில்...
மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு நேற்று 35 மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் பொது மக்களே ஈடுபட்டனர். 75 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போல்..
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக திரண்டது போல மெரினாவில் மாணவர்கள் கூடப்போவதாக வாட்ஸ் - அப்பில் தகவல் பரவி வருகிறது. இது குறித்த உளவுத் துறை அளித்த தகவலின்பேரில் மெரினாவில் நேற்று காலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு
மெரினா நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் ஏராளமான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு வளையத்துக்குள்...
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாவட்ட தலைநகரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மாணவர்கள், மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அதுபோல யாரும் திரண்டு விடக்கூடாது என்பதில் போலீஸார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் மெரினாவுக்கு செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications