மூடப்பட்ட மெரீனா சாலைகள் திறப்பு.. வாகனப் போக்குவரத்து தொடங்கியது.. மக்களிடம் உற்சாகம் மிஸ்ஸிங்!
சென்னையில் நடைபெற்ற கலவரத்தின் போது மெரினாவிற்கு செல்லும் சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. குடியரசு தின விழா முடிவடைந்ததையடுத்து 3 நாட்களுக்கு பின்னர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர போலீசார் கடந்த திங்கள் கிழமை முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து சென்னை மெரினாவிற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த சாலைகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்துள்ளது.
6 நாட்களாக ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதனை முடித்து கொள்ள மாணவர்களிடம் போலீசார் தீவிரம் காட்டினார்கள். அப்போது மாணவர்கள், இளைஞர்களை போலீசார் அடித்து விரட்டினார்கள். மேலும், மாணவர்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மெரினா செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால், குறிப்பிட்ட சில சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் சென்று வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில், இன்று காலை குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிவடைந்தது. இதனையடுத்து, மெரினாவிற்கு செல்லும் அனைத்து பாதைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் குவிப்பும் சற்று குறைந்துள்ளது.
டாக்டர் நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, ஐஸ் ஹவுஸ் பகுதி, பாரதி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து இனி சீரடையும் என்று மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.