அலை மோதும் தீபாவளிக் கூட்டம்... சென்னை தி.நகரில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டது. இதையடுத்து துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டது. இதைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய பர்சேஸ் பகுதிகளான தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் பலப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகளை வந்ததன் காரணமாக தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் உள்ளது. பாரிமுனை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தற்போது தீபாவளிக் கூட்டமும் வர ஆரம்பித்து விட்டதால் இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாகியுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
தி.நகரில், ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான்ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
மேலும் 20 கேமராக்கள் வருகை
இன்னும் சில தினங்களில் கூடுதலாக 20 கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
போத்தீஸ் அருகே கட்டுப்பாட்டு அறை
இதற்காக போத்தீஸ் ஜவுளி கடை அருகில் சிறிய கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தபடியே பைனாகுலர் மூலமாகவும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்கச் சங்கிலி மற்றும் கைப்பைகளை பறித்துச் செல்லும் பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்கவும் மாறுவேடத்தில் போலீசார் சுற்றி வருகிறார்கள்.
சில்மிஷம் செய்பவர்களைப் பிடிக்க சுடிதார் போலீஸ்
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களை பிடிக்க பெண் போலீசார் சுடிதார் அணிந்து கொண்டு கண்காணிக்கிறார்கள்.
நள்ளிரவு வரை ரோந்து
மேலும் போலீஸார் இப்பகுதிகளில் நள்ளிரவு 12 மணி வரை ரோந்து சுற்றி வருகின்றனர். தீபாவளி நெருங்க நெருங்க ரோந்தும் அதிரிக்கும் என்று தெரிகிறது.
புரசைவாக்கத்தில்
புரசைவாக்கத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் அதிக அளவில் கூடி வருகின்றனர். இதனால் அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
வண்ணாரப்பேட்டை
புது வண்ணாரப்பேட்டை பகுதியில், ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. அங்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.