வாட்ஸ் அப்’பில் வதந்தியை பரப்பி பீதியை கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கை.... போலீஸ் எச்சரிக்கை
காஞ்சிபுரம்: சென்னை மூழ்குகிறது, ஏரி உடைந்தது என்பது போன்ற தவறான தகவல்களை வாட்ஸ் அப்'பில் பரப்புபவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி கூறியுள்ளதாவது:
கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்கள் உடைமைகளை இழந்து கடும் அவதிக்குள்ளன மக்கள் மெதுவாக தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், சென்னை புறநகர் பகுதியான மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை பயமுறுத்தும் வகையில் சிலர் சென்னை மூழ்கப்போகிறது, ஏரிகளின் கரைகள் உடைந்துவிட்டன என்று தவறான தகவல்களை ‘வாட்ஸ் அப்'பிலும், முகநூலிலும் பரப்பி விடுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தையூர் ஏரி பாதுகாப்பாக உள்ளது. இந்த ஏரி உடைந்தால் கேளம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். எனவே இதனை கண்காணிக்க 24 மணி நேரமும் போலீசார் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பாதுகாப்பாக உள்ள தையூர் எரி உடையவிருப்பதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்று ‘வாட்ஸ் அப்' மூலமாக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2-ந் தேதி கேளம்பாக்கம்அருகே உள்ள ஒரு தனியார் எஎன்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்ததால் விடுதியில் இருந்த மாணவ- மாணவிகள் தங்களை காப்பாற்றும் படி போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக என்னுடைய தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு 2 படகில் சென்று எங்கள் உயிரையும் பணயம் வைத்து கயிறு, ஏணி மூலம் 25 மாணவிகள், 57 மாணவர்கள் உள்ளிட்ட 82 பேரை பத்திரமாக மீட்டோம், என்று கூறினார்.