கதிராமங்கலத்தில் இருந்து போலீஸ் வெளியேறியது- மெல்ல திரும்பும் இயல்புநிலை
கதிராமங்கலத்தில் இருந்து போலீஸ் வெளியேறியதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் வெளியேறி வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கதிராமங்கலத்தில் உள்ள காவல்துறையை உடனே வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் முதல்வர் இல்லம் அல்லது தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீசார் வெளியேறி வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து வெள்ளிக்கிழமையன்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அதிகாரிகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
சாலையில் கிடந்த முட்செடிகளையும், வைக்கோல்போர்களையும் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால், அது கொழுந்து விட்டு எரிந்தது. தீயை அணைப்ப தற்காக போலீஸார் சென்றபோது, பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். ஆத்திரமடைந்த போலீசார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ஏராளமானோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து கடந்த 4 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. போலீசாரை வெளியேற்ற வேண்டும் என்று சட்டசபையிலும் திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
10 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்ப பெற வேண்டும் என்றும் போலீசார் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தினர். இந்த நிலையில் போலீசார் வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 சதவிகித போலீசார் வெளியேறி வருவதால் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அடைக்கப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்று ஆட்சியர் அண்ணாதுரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications