தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு தீவிரம் !
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பொது இடங்களில் வரையபட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப் படங்கள், கட்சி சின்னங்கள், சுவர் விளம்பரங்கள், முதல்வர் படத்துடன் இடம்பெற்றுள்ள அரசு விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல் பலகைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அந்த படங்கள் அகற்றப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட அரசு விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களின் பின்புறம், முதல்வர் படத்துடன் கூடிய அரசின் சாதனை விளக்கும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை மறைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளின் இரு புறமும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை வெள்ளை அடித்து மாநகராட்சியினர் மறைத்து வருகின்றனர்.
பல இடங்களில் இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து இந்த பணிகள் நடந்து வருகிறது இன்னும் ஓரிரு நாட்களில் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள் முழுவதும் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்தனர்.