ஜேப்பியார் மறைவு: அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் ஜேப்பியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சத்தியபாமா கல்வி குழுமங்களின் தலைவராக இருந்து வந்தவர் ஜேப்பியார்,85. இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார்.
இதையடுத்து, சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஜேப்பியார் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு கல்வி துறை சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், ஜேப்பியார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் சிவகுமார்,நடிகர் மயில்சாமி, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவ மாணவிகள், நிர்வாகிகள், ஊழியர்களும் வரிசையில் நின்று ஜேப்பியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வைகோ இரங்கல்
ஜேப்பியார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிறந்த ஜேப்பியார் அவர்கள் காவல்துறையில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக அண்ணா தி.மு.க.வில் திகழ்ந்தார்.
மேலவையில் ஆளும் கட்சியின் கொரடாவாகவும், சென்னை மாநகரில் சோதனையான காலகட்டத்தில் குடிநீர் வழங்கும் பொறுப்பில் திறமையாகப் பணியாற்றினார். மக்கள் திலகம் மறைவுக்கு பின்னர் அரசியலை விட்டு விலகினார்.
ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கி அதனை நிகர் நிலை பல்கலைக்கழகமாகவே உருவாக்கினார். அவரது விடா முயற்சியால் கல்வியில் பட்டங்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பழகுவதற்கும், நட்புக்கும் மிக மிக இனிமையானவர். உடல் நலக் குறைவால் அவர் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.