அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
சென்னை: அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இன்று தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாத்துரையின் 106வது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி வெவ்வேறு இடங்களில் அண்ணாவின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதேபோல், ம.தி.மு.க. சார்பில் தாயகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் அண்ணாவின் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேது ராமன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பொதுச்செயலாளர் ச.இசக்கி முத்து, சங்கரபாண்டியன், நாதன், முத்துப்பெருமாள், சேப்பாக்கம் சுரேஷ் மற்றும் நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு புதிய நீதிக்கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகமும், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், மதுரையில் அழகிரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.