கச்சநத்தம்: படுகொலை செய்யப்பட்டோர் உடல்களுக்கு திருமாவளவன், அமீர், பாரதிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி
கச்சநத்தம் படுகொலையில் உயிரிழந்தோருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை: மதுரையில் கச்சநத்தத்தில் படுகொலை செய்யப்பட்டோருக்கு மூவரின் உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இதைக் கண்டித்து கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டனர்.

திருமாவளவள் நேரில் ஆறுதல்
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் இன்றும் பிற்பகல் வரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று சமூக விரோதிகளுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தியதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோரிக்கைகள் ஏற்பதாக அறிவிப்பு
இதனிடையே சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சு நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 4-நாள் காத்திருப்பு தொடர் போராட்டத்தை கைவிடுவதாக ஊர்மக்கள் அறிவித்தனர். பின்னர், படுகொலை செய்யப்பட்ட 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலைவர்கள் வீரவணக்கம்
அப்போது, பலத்த பாதுகாப்புடன் உயிரிழந்தோரின் சடலங்கள் கச்சநத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களது உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீர வணக்கம் செலுத்தினார். அதேபோல இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோரும் படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழன் என பதிவு செய்யுங்கள்
முன்னதாக, கச்சநத்தம் மோதல் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளியில் சேரும்போது இனம் என்ற இடத்தில் தமிழன் என பதிவு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கச்சநத்தம் வன்முறை சம்பவம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பாச்சேத்தி பகுதியை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் என்றும், சிறப்பு உளவு பிரிவினரை பணியில் அமர்த்தி அந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications