அரசியல்வாதிகளின் புதிய தந்திரம் - “ஆன்லைன் மணி டிரான்ஸ்பர்” திட்டம்
சென்னை: வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பணத்திற்கு ஓட்டை விற்கும் நிலைமை வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தனது தேர்தல் நேர போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வாகன பரிசோதனையில் பறிமுதல், உரிய ஆவணம் இல்லாத பணம் காவல்துறையில் ஒப்படைப்பு என தீவிர கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதற்கு புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர்.
எத்தனுக்கு எத்தன்:
"நீ விடா கண்டன் என்றால்,நான் கொடா கண்டன்" என்ற வகையில் வாகனச் சோதனையில் உரிய ஆவணமில்லாத பணத்தைதான் தேர்தல் கால பறக்கும் படை பறிமுதல் செய்ய முடியும்.ஆனால், வங்கி கணக்கிற்கு நாங்கள் பணத்தை மாற்றினால் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற வகையில்,தேர்தல் ஓட்டிற்கான பணத்தை ஓட்டுபோடுபவர்களுக்கு வங்கி கணக்கு மூலம் வழங்கி வருகின்றார்களாம் சில அரசியல் கட்சியினர்.
பிடிக்கமுடியாதே!!பிடிக்க முடியாதே!! :
இதன் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தாலும் அதனை தேர்தல் ஆணையம் ஒன்றும் செய்ய இயலாது.அப்படி மீறி நடவடிக்கை எடுத்தாலும் உண்மையாக பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் பாடு திண்டாட்டம் ஆகி விடும்.இதனால், "பிடிக்கமுடியாதே" என்று வடிவேல் பாணியில் தண்ணி காட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையத்துகே "அல்வா" :
மொத்தத்தில் தேர்தல் ஆணையம் புது வழிகளைக் கண்டறிந்து தேர்தல் கால விதிமீறல்களை தடுக்க நினைத்தாலும் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் புதிய வழிகளைக் கண்டறிந்து அவர்களுக்கே "அல்வா" கொடுக்கின்றனர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
பறிமுதல்:
தற்போது தமிழகம் முழுவதும் தேர்தல் கால பறக்கும் படையினர் படு சுறுசுறுப்பாக பணம் கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து சோதனை மூலம் கைப்பற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணம் பறிமுதலாகியுள்ளது.
நூதன திட்டம்:
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றும் வகையில் நூதனமான முறையில் ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் திட்டத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.