ஆம் ஆத்மி கட்சி விவகாரம்: உதயகுமார், புஷ்பராயன் நட்பில் விரிசல்!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்துக்கு எதிராக அணு உலை எதிர்ப்பாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் சுப.உதயகுமார் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நெல்லைக்கே வந்து கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் உதயகுமார் போன்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில் ‘ஆம் ஆத்மி' கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக் குமார் முன்னிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில், மைபா.ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் ஆகியோரும், நூற்றுக்கணக்கானவர்களும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.
இந்த போரட்டத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் புஷ்பராயன் ஆம் ஆத்மி கட்சியில் சேரவில்லை. நமக்கு அரசியல் பாதை தேவையில்லை என்ற கருத்தில் புஷ்பராயன் உறுதியாக உள்ளார்.
இது குறித்து உதயகுமார் கூறுகையில்,
எங்களின் கோரிக்கையை அனைத்து கட்சியினரிடமும் வைத்தோம். குறிப்பாக, மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போன்ற சிலரே எங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அது தான் எங்களுக்கு பாதுகாப்பை தந்தது. எங்கள் கருத்தையும், பாதுகாப்பையும் வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்.பிக்கள் தேவை. அதனால் தான் தேர்தல் பாதையை தேர்வு செய்ய நேரிட்டுள்ளது என்றார்.
ஆனால் இடிந்தகரையில் உள்ள பெரும்பாலான பொது மக்கள், ஒன்றாக இருந்து எங்களுக்காக, இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்திய சுப. உதயகுமாரையும், புஷ்பராயனையும் இந்த பாலும் அரசியல் பிரித்துவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர்.