ஆபரேசன் 234… அதிரடியில் இறங்கிய ஆளும் அதிமுக… இலவச பொருட்கள் விநியோகம் வெகுஜோர்…
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது ஆளும் அதிமுக. முதல்வர் ஜெயலலிதா இதற்கான சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விலையில்லா பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பெண்களை கவரும் வகையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை விநியோகம் செய்வது இந்த ஆண்டு இறுதிக்குள் முழு இலக்கை எட்டவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப், ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், பட்டதாரி மாணவிகளுக்கு திருமண நிதி உதவி திட்டம் என அதிரடியாக பல திட்டங்களை அறிவித்தார்.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக இவை வழங்கப்பட்டு வருகின்றன. 1 கோடியே 82 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு தயாரித்து வழங்க முடியாது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக நிதி ஒதுக்கி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் குறித்து செய்தி மற்றும் நேற்று ஆய்வு செய்தார். இதில், துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலக்கு நிர்ணயம்
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், 2014-15 நிதியாண்டில் மொத்தம் 45 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 35 லட்சம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 10 லட்சம் பேருக்கான பொருட்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2011ம் ஆண்டு முதல்
2011-2012 ஆம் ஆண்டு 25 லட்சம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டன. 2012-2013 ஆம் ஆண்டில் 35 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள், வழங்க உத்தரவிடப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
ரூ.3,797 கோடி ஒதுக்கீடு
2015-16-ம் ஆண்டிலும் 45 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பொருட்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த இரு ஆண்டுகளில் மட்டும் இலவச பொருட்களுக்காக ரூ.3,797 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
1.30 கோடி மகளிர்
இத்திட்டத்தில் இதுவரை ரூ.8,667 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 1.30 கோடி மகளிருக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் முழு இலக்கை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலவச பொருட்கள் விநியோகம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை 21.69 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டு விட்டன. 48000 கறவை மாடுகள் வழங்கப்பட்டுவிட்டன. 5.49 லட்சம் தாலிக்குத் தங்க காசுகள் வழங்கப்பட்டு விட்டன.
கறவை பசுக்கள்
கிராமப்புறங்களில் 7 லட்சம் மகளிருக்கு விலையில்லா கறவைபசுக்கள், ஆடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இலவசங்களை விநியோகம் செய்து விட்டால், சட்டமன்ற தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளலாம் என்று அதிமுக திட்டமிட்டுள்ளது.
ஆபரேசன் 234
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற அதிமுக, சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப சத்தமில்லாமல் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எதிர்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்குமா? தனித்தனியாக போட்டியிட்டு அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்பதை 2016 சட்டசபை தேர்தலில் தெரிந்து கொள்ளலாம்.