22 மார்க்கை 42 என திருத்திய தில்லாலங்கடி மாணவி... பாலிடெக்னிக்கின் பரபரப்பு புகார்!
கரூர்: கரூரில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் மீது பாலிடெக்னிக் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளனர்.
கரூர் அருகே பழைய ஜெயக்கொண்டம் அரசு பள்ளியில் கடந்த 2013ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தவர் மீனா என்ற மாணவி. இவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்தில் 22 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தனது மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலப் பாட மதிப்பெண்ணை 22 என்பதற்கு பதிலாக 42 என மாற்றி மீனா முறைகேடு செய்ததாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளது.
மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மீனா அதே அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பிலும் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்ததால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பம் அளித்துள்ளார். விண்ணப்பத்தின் போது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை திருத்தியது அம்பலமாகியுள்ளது என அப்புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.