விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளது திமுக.
திமுக கூட்டணியில் பொன் குமார் தலைமையிலான விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி இணைந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று திமுக தலைவர் கருணாநிதியை பொன் குமார் தலைமையிலான குழு நேரில் சந்தித்துப் பேசியது. அதன் பின்னர் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன், பொன் குமார் குழு சந்தித்துப் பேசியது.
அறிவாலயத்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் பொன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது.
நாங்கள் ஐந்து தொகுதிகளைக் கேட்டுள்ளோம். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம். எங்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவில் தொகுதிப் பங்கீடு அமையும் என நம்புகிறோம்.
திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவுள்ளோம். அந்த சந்திப்புக்குப் பின்னர் தொகுதிப் பங்கீடு முடிவடையும். எத்தனை இடம் என்பதை விட திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதே முக்கியம். அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம் என்று பொன் குமார் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பொன் குமார் தலைமையிலான குழு கருணாநிதியைச் சந்தித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தனது கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டிருப்பதாக பொன் குமார் தெரிவித்தார்.
இதுவரை திமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5, மனித நேய மக்கள் கட்சி 5, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி 1) ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.