தமிழகத்தில் இந்தி கட்டாயம் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: தமிழகத்தில் இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் படிக்கலாம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் உதயகுமார் தலைமையிலான போராட்டகுழுவினர் வந்து என்னை சந்தித்தனர். அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றியும், கூடங்குளம் 3, 4 அணு உலைகள் தொடங்க கூடாது என்றும் அவற்றை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் அணு உலைகள் வரக்கூடாது என்று ஆரம்பத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தினோம். அப்போது யாரும் எங்களது போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அணு உலை இப்போது தொடங்கப்பட்டு விட்டது. நாட்டின் வெளியூறவு கொள்கையில் தினமும் மாற்றம் கொண்டு வந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகதான் இப்போது உறுதியளிக்க முடியும்.
இந்து முன்னனி ஆடிட்டர் ரமேஷ், சுரேஷ்குமார் என்று அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குற்றவாளிகளை முறையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
மூன்று, நான்கு பேர் சேர்ந்து இதை செய்யவில்லை. இதன் பின்னனியில் மிகப்பெரிய கூட்டணி இருக்கிறது. ரயில் கட்டண உயர்வு என்பது தேர்தலுக்கு முன்பே மத்திய அரசு கொண்டு வந்தது ஆகும். இந்த கட்டண உயர்வு மக்களுக்கான தண்டனை இல்லை. நாட்டின் வளர்ச்சியில் எல்லோரும் பங்களிக்க வேண்டும்.
இந்தி திணிப்பை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். தமிழ் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் எந்த அளவில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆங்கிலமும், இந்தியும் பிழைப்பு மொழிகள். பிற மொழிகள் படிக்கும் போது இந்தி ஏன் படிக்க கூடாது. தமிழக மாணவர்கள் இந்தியை விரும்பி படித்தால் படிக்கலாம். இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.