ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை.. பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: ரஜினிகாந்த்தை பாஜகவுக்கு இழுக்க கடுமையாக முயன்று வந்த பாஜகவுக்கு சமீபத்தில் ரஜினி ஒரு சின்ன ஷாக் கொடுத்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்தும், ஆறுதலும் கூறி அவர் அறிக்கை விட, ஜெயலலிதாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு நன்றி கூறியிருந்தார். இதனால் ரஜினியை நோக்கி பாய்ந்து வந்த பாஜக தரப்பு தற்போது அமைதியாகி விட்டது.
இந்த நிலையில் ரஜினியை பாஜகவில் சேருமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லையே என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கன்னி்யாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
யார் வேண்டுமானாலும் வரலாம்
பா.ஜ.க.வுக்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். ரஜினியை பா.ஜ.க.வில் சேருமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
அவருக்கு விவரம் தெரியும்
அவர் விவரம் தெரிந்தவர். ஆன்மீகமும், தேச பக்தியும் கொண்டவர்.
முடிவெடுக்க அவருக்குத் தெரியும்
எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவர் நல்ல முடிவு எடுப்பார்.
வளர்ச்சி அடைந்த நாடாக மாறுகிறது இந்தியா
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்கு தேவையான நல்ல திட்டங்களை செய்து வருகிறது. ஏழைகளுக்கு வங்கி கணக்கு திட்டம், தூய்மை திட்டம் போன்ற திட்டங்களால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறி வருகிறது.