ஓபிஎஸ் உடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு- ஜெ.வுக்கு நன்றி!
சென்னை: தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்துப் பேசினார்.
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்னை வந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் திடீரென சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டுவருவது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்து இருந்தார்.
குளச்சல் துறைமுகம் செயல்படுத்த மத்திய அரசுக்கு முழுஒத்துழைப்பு தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை பறக்கும் சாலை அமைக்கும் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்ப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளோம். இதேபோல் பல்வேறு சாலை மற்றும் துறைமுக பிரச்சினைகளையும் பேசி தீர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பாலம் அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கும், மதுரை ரிங்ரோடு விரகனூர் அருகில் பகல் 3 மணிக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்காக நடக்கும் அடிக்கல் நாட்டு விழாக்களில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும் ஆதரவு அளித்து வரும் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.