கோவா, மணிப்பூரில் மிரட்டி உருட்டி ஆட்சி... கர்நாடகத்தில் பாஜக பப்பு வேகவில்லை- நாராயணசாமி
கோவா, மணிப்பூரில் மிரட்டி உருட்டி ஆட்சி செய்த பாஜகவின் முயற்சி கர்நாடகத்தில் எடுபடவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை: கோவா, மணிப்பூரில் மற்ற கட்சி எம்எல்ஏக்களை மிரட்டி பணிய வைத்து ஆட்சியை பிடித்த பாஜகவால் கர்நாடகத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்பட்டது. இதற்காக காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை ஹைதராபாத்தில் தங்க வைத்திருந்தது.
எனினும் அவர்களை விடாமல் ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பாவின் மகன், எடியூரப்பா ஆகியோர் பணத்தாசை மற்றும் அமைச்சர் பதவி காட்டி தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்தனர். ஆனால் இவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.
இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில் பல மாநிலங்களில் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏக்களை மிரட்டிய பாஜகவின் முயற்சி கர்நாடகத்தில் எம்எல்ஏக்களை மிரட்டும் முயற்சி எடுபடவில்லை.
பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே இந்த விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் எடுத்த தவறான முடிவை ஒத்துக்கொண்டு பதவி விலக வேண்டும்.
ஆளுநரை வைத்து மிரட்டி ஆட்சி செய்யும் பாஜகவின் செயலுக்கு கர்நாடகா முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றார் நாராயணசாமி. கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்துள்ளதால் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி மகிழ்ச்சியில் உள்ளது.