நாராயணசாமி காரில் பைப் வெடிகுண்டு: நாளை மறுநாள் புதுச்சேரியில் காங். பந்த்
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் அடியில் மிகச்சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு புதன்கிழமை கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுவையில் காங்கிரஸ் கட்சி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பந்த் அறிவித்துள்ளது.
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் தெருவில் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி வீடு உள்ளது. அவர் திங்கள்கிழமை புது டெல்லி சென்று விட்டார். இந்நிலையில் புதன்கிழமை காலை அவரது உதவியாளர்கள் தன்ராஜ், ஜோதி ஆகியோர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வி.நாராயணசாமிக்கு சொந்தமான சொகுசு காரின் அடியில், இரு பக்கமும் மூடப்பட்ட நிலையில், பைப் போன்ற பொருள் கிடந்தது. அந்த பைப்பின் அருகில் 2 ஒயர்களில் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது.
இதனைக் கண்ட நாராயணசாமியின் உதவியாளர்கள் இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி. நந்தகோபால் மற்றும் போலீஸார் வந்து அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி வெடிகுண்டை பார்வையிட்டனர்.
தகவலறிந்து வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் பைப் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்வதற்காக உப்பளத்திலுள்ள பழைய துறைமுக மைதானத்துக்கு வெடிகுண்டை எடுத்துச் சென்றனர்.
மதியம் 2 மணி வரை முயற்சித்தும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முடியவில்லை. மாலை 6 மணியளவில் ராமச்சந்திரன் என்பவர் தலைமையில் வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வந்து அதை வெடிக்கச் செய்தனர். அதன் பின் வெடிகுண்டை நிபுணர்கள் பரிசோதித்தனர். அதில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஜெல்லெக்ஸ் என்ற ரசாயன வெடிப்பொருள் 1 கிலோ வைக்கப்பட்டிருந்தது.
தீவிரவாதிகள் பயன்படுத்துவது…
மேலும் 21 எலக்ட்ரிக் டெட்டனெட்டர்கள், 12 சாதாரண டெட்டனேட்டர்கள் அவற்றில் இணைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டு தீவிரவாதிகள் பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது என போலீசார் கூறியுள்ளனர்.
மக்கள் மத்தியில் அச்சம்
இதுவரை நாட்டு வெடிகுண்டுகள் மட்டுமே கைப்பற்றப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டு கைப்பற்றப்பட்டிருப்பது புதுவை மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலத்த சேதம்
இந்த குண்டு மட்டும் வெடித்திருந்தால் 300 மீட்டர் சுற்றளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸார் மறியல்
இந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
புதுவையில் பந்த்
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுவையில் காங்கிரஸ் கட்சி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பந்த் அறிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வி.நாராயணசாமி, புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், வெடிகுண்டு கலாசாரம் இருப்பதாகவும் ஏற்கெனவே பல முறை தெரிவித்துள்ளேன். தற்போதைய அரசியல் சூழலில் யார் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை என்றார்.
விசாரணைக்கு குழுக்கள்:
இதனிடையே, சம்பவ இடத்தை புதுச்சேரி டிஜிபி காமராஜ் பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் கூறியது: இச் சம்பவத்தில் உண்மையைக் கண்டறிய பல குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது என்றார்.
நாராயணசாமி ஆதரவாளர் கொலை
கடந்த நவம்பர் மாதம் புதுச்சேரி அருகே மத்திய அமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளரான காமராஜ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்தநிலையில் அமைச்சர் நாராயணசாமியை கொலை செய்ய பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.