புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரசுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
புதுச்சேரிக்கு நேற்று மாலை பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் லட்சுமணன், தேசிய செயலாளரும் தமிழக அமைப்பு செயலாளருமான மோகன்ராஜுலு ஆகியோர் வந்தனர். அவர்கள் ஹோட்டல் அண்ணாமலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது என்.ஆர். காங்கிரஸ் பொது செயலாளர் பாலன், செயலாளர்கள் ஜெயபால், ஞானம் மற்றும் பாரதிய ஜனதா மாநில தலைவர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தை நடைபெற்றதை முதல்வர் ரங்கசாமி மறுத்தார், தாம் நண்பர்களுடன் டீ குடிக்கவே ஹோட்டலுக்கு வந்தேன் என்றார்.
பின்னர் திலாசுபேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று பாஜக குழுவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரியில் கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமை தாங்கும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அக்கட்சி முன்வைத்ததாக கூறப்படுகிறது.