கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி.... சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை!
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்புச் சந்தை திறக்கப் பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கலையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்புச் சந்தை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்தாண்டு பொங்கல் சிறப்புச் சந்தை கடந்தவாரம் வெள்ளியன்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடை பெற உள்ளது. இதில், கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து ஆகியவை விற்பனை செய்யப்படும்.
கடலூர் மற்றும் தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பொங்கல் சிறப்புச் சந்தை அனுமதி ரூ. 7 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்தாண்டு சந்தைக்கு கரும்பு வரத்து அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்தைக்கு மதுரை மாவட்டம் மேலூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, சிதம்பரம், மயிலாடுதுறை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு தரமான கரும்பு ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ. 300-க்குத் தொடங்கி பிறகு ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இது ரூ. 350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது, பொங்கலின்போது ரூ. 250 வரை குறைய வாய்ப்புள்ளது.
போதிய மழையின்மை, குறித்த காலத்தில் மழை பெய்யாதது ஆகிய காரணங்களால் நிகழாண்டு கரும்பு விளைச்சல் மற்றும் தரம் குறைந்துள்ளதால் தற்போதைக்கு கரும்பு விற்பனை சற்று மந்தமாக உள்ளதாகவும், நாளை இது அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.