போர்சே கார் விபத்து - குடிகார விகாஷ், சரண் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சென்னையில் போர்சே சொகுசு காரை குடிபோதையில் ஓட்டி கோர விபத்து ஏற்படுத்திய கார் ரேஸ் சாம்பியன் விகாஷ் மற்றும் அவரது நண்பர் சரண்குமார் ஆகியோருக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது. இருவரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராதாகிருஷ்ணன் சாலையில் செப்டம்பர் 19ம் தேதி அதிகாலையில் சொகுசு காரில் குடிபோதையில் வந்த நபர் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தினார். அதில் திருத்தணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் பலியானார். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
போதையில் காரை ஓட்டிய நபர் தி.நகரை சேர்ந்த கார் ரேஸ் வீரர் விகாஷ், காரில் உடன் வந்த நபர் விகாஷின் நண்பர் சரண்குமார் இருவரையும் பரிசோதித்ததில் இருவரும் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
போதையில் கார் ஓட்டிய விகாஷ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டிகள் கடந்த வாரம் ஞாயிறன்று நடைபெற்றது. வெற்றிபெற்ற அணி சார்பில் நடந்த விருந்தில் விகாஷ், சரண் இருவரும் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளனர். இருவரும் போர்சே சொகுசுக் காரில் வீடு திரும்பியபோது கண்மூடித்தனமாக காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் இருவரின் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜாமீன் கோரி மனு
இந்நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி விகாஷ், சரண்குமார் இருவரும் கடந்த வாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, இருவரும் அதிகபட்ச மது போதையில் காரை ஓட்டியுள்ளனர். அவர்கள் உடலில் 67 சதவீதம் மது அருந்தியதற்கான சான்றுகள் உள்ளன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
சரண்குமார் வக்கீல்
அப்போது, சரண்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் இதற்கும் தொடர்பில்லை. அவர்களைக் கைது செய்வது தவறு என்று கேரள நீதிமன்றம் கடந்த 2011ல் தீர்ப்பளித்துள்ளது என்றார். அதற்கு அரசு வக்கீல் கூறும்போது, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள வழக்கில் எந்த விபத்தும் நடைபெறவில்லை.
ஜாமீன் மனு தள்ளுபடி
வேகமாக, நிறுத்தாமல் கார் ஓட்டியதுதான் அந்த வழக்கு. எனவே, அந்த தீர்ப்புக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றார். விகாஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகவேலாயுதம், விகாஷ் கல்லூரியில் படிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையைத் தரத் தயாராக உள்ளார் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.