"பொதுச்செயலாளர் மகேந்திரன்" .. கம்யூனிஸ்ட் கட்சியில் கலகக் குரல் வெடிக்கிறது?
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தேர்தலில் கடைசி நேரத்தில் 'கவிழ்க்கப்பட்ட' சி. மகேந்திரனை முன்வைத்து விரைவில் அக்கட்சியில் மிகப் பெரிய அளவிலான கலகக் குரல் வெடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக 'மாநில பொதுச்செயலாளர்' சி. மகேந்திரன் என்ற பெயரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக மூன்று முறை தொடர்ந்து பதவியில் இருந்தவர் தா. பாண்டியன். எப்படியும் 4வது முறையாகவும் மாநில செயலராகிவிடலாம் என்று ஒரு பக்கம் முயற்சித்துக் கொண்டிருந்தார் தா. பாண்டியன்.
அதே நேரத்தில் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிர்வாகிகளோ கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சியில் கட்சிக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்ற விவகாரம், சென்னையில் கட்சி அலுவலகம் கட்டியதற்கான வரவு செலவு விவகாரம் ஆகியவைதான் தா.பாண்டியன் மீதான அதிருப்திக்கு காரணங்கள்.
இந்த விவகாரங்களில் தா. பாண்டியன் மீது விசாரணையும் நடத்தப்பட்டது. இதனால் தா. பாண்டியன் தொடர்ந்து மாநில செயலாளர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கை. அவருக்குப் பதிலாக துணைச் செயலரான சி. மகேந்திரனை தேர்ந்தெடுத்தால் தா. பாண்டியனுக்கு செக் வைத்தது போலாகிவிடும் என்பது ஒருதரப்பினர் விருப்பமாக இருந்தது.
கோவை மாநாடு
இந்நிலையில்தான் கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் சி. மகேந்திரனுக்கும் திருப்பூர் சுப்ப்ராயனுக்கும் மாநில செயலாளர் பதவிக்கு போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
125 மாநிலக் குழு உறுப்பினர்கள்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் மொத்தம் 125 மாநிலக் குழு உறுப்பினர்கள்தான் மாநில செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் முதல் கட்டமாக 125 மாநிலக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வடிகட்டப்பட்ட சி.ம. ஆதரவாளர்கள்
இம்மாநிலக் குழு உறுப்பினர்களில் சி மகேந்திரன் ஆதரவாளர்களை எப்படியும் வடிகட்டிவிடுவது என்று கங்கணத்துடன் தா. பாண்டியன் தரப்பு முட்டி மோதியது. இதில் ஒரு சில மகேந்திரன் ஆதரவாளர்கள்தான் வடிகட்டப்பட்டனர்.
தா.பா. ஆதிக்கம்
இதேபோல் 7 பேரைக் கொண்ட மையக் குழுவில் 6 பேர் தா. பாண்டியன் ஆதரவாளர்களாக தேர்வாகினர். இந்த நிலையில் மாநில செயலாளர் தேர்தல் நடைபெறும் நிலையில் தா. பாண்டியன் தரப்பு அதிரடியாக ஒரு செக் வைத்தது.
நிபந்தனை
அதாவது தா. பாண்டியன் மீதான புகாரை விசாரித்த மையக் குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 12 பேரை 125 பேர் கொண்ட மாநிலக் குழுவில் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.
சாதகமான துணை விதி
இன்னொரு பக்கம் மாநாட்டுக்கு வராதவர்களையும் மாநிலக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யலாம் என்ற கட்சியின் துணை விதியை சுட்டிக் காட்டி தமது ஆதரவாளர்களை மாநில குழுவில் சேர்த்திருக்கிறார் தா. பாண்டியன்.
முத்தரசனை களமிறக்கிய தா.பா.
இருப்பினும் 125 பேரில் 75% பேர் (93 பேர்) ஆதரவு இருந்தால் தாம் 4வது முறையாக மாநில செயலாளராக முடியும்; தமக்கு அவ்வளவு ஆதரவு கிடைக்காதே என்ற நிலையில் திடீரென முத்தரசனை வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டார் தா. பாண்டியன்.
51% ஆதரவு தேவை
தா. பாண்டியன் என்ன தலைகீழாக நின்றாலும் வெற்றி நமக்கே என்ற நம்பிக்கையுடன் மகேந்திரன் தரப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து மகேந்திரன் Vs முத்தரசனுக்காக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் புதிய மாநில செயலாளருக்கு 51% ஆதரவு தேவை.
2 ஓட்டு வித்தியாசத்தில்..
வாக்கெடுப்பில் முத்தரசனுக்கு 63; மகேந்திரனுக்கு 61 வாக்கெடுகள் கிடைத்தன. இதில் 3 செல்லாத வாக்குகளாம். வெறும் 2 வாக்குகளில் மகேந்திரன் செயலராக முடியாமல் போனது அவரது ஆதரவாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.
புறக்கணிப்பு
இதனாலேயே தேர்தல் முடிவடைந்த நிலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகேந்திரன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டாராம்.
கடும் அதிருப்தி..
எப்படியோ தாம் நினைத்த ஒருவரையே கட்சியின் மாநில செயலராக்கிவிட்டோம் என்று தா. பாண்டியன் தரப்பும் சற்றே தெம்பாக வலம் வந்து கொண்டிருக்கிறதாம். இதில் கடைசி நேரத்தில் திருப்பூர் சுப்பராயன் முழுவதுமாக தா. பாண்டியன் பக்கம் சாய்ந்து போட்டியில் இருந்தே ஒதுங்கிக் கொண்டது குறித்து கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்..
பொதுச்செயலரா?
இதனிடையே சி. மகேந்திரன் ஆதரவாளர்கள் "புதிய பொதுச்செயலாளர்" என பல இடங்கள் போஸ்டர்களை ஒட்டிவிட அது இன்னும் களேபரமாக்கிவிட்டதாம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் என்ற பதவிதான் இருக்கிறது.. பொதுச்செயலாளர் பதவியே இல்லை. அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கலகக் குரல்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்க இருக்கிறது. அதாவது புயலுக்கு முந்தைய அமைதி போல மகேந்திரன் தரப்பு அமைதி காக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த போஸ்டர்கள் என்ற பீடிகையும் போடுகின்றனர் சில இடதுசாரி தோழர்கள்.
புதிய கட்சி?
தமிழ்த் தேசிய, தமிழீழ ஆதரவாளரான சி. மகேந்திரனை பொதுச்செயலாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உதயமானாலும் ஆச்சரியமில்லை என்றும் கண் சிமிட்டுகின்றனர்.. இதன் முன்னோட்டமே போஸ்டர் என்றும் கூறப்படுகிறது.
ஆக கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு "கலகக் குரல்" காத்திருக்கிறது!!