அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு! முடங்கும் தமிழகம்!!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கியுள்ளதால் சிறுதொழில்களும், அரசு நிறுவனங்களும் முடங்கிக் போயுள்ளன.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதலே மின் வெட்டு அதிகமாக இருந்தது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் குறைந்தது 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவியது. தமிழகம் முழுவதும், தொடர் மின் தடை காரணமாக, ஏற்றுமதி நிறுவனங்களின் ஜவுளி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வந்தது.
சென்னையில் மட்டும் மின்வெட்டுப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பலமாவட்ட மக்களின் குமுறலைத் தொடர்ந்து சென்னையிலும் இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
அகன்ற மின் வெட்டு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது கோடைக்காலம் முடிந்த நிலையில், மின்வெட்டு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. குறிப்பாக காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலை மின்சாரம் அதிகரிக்கத் தொடங்கியதால் மின்வெட்டு கிட்டத்தட்ட முழுமையாக அகன்றது. தினமும் மின்தடை என்பது மிகவும் அரிதாக இருந்தது.
மின் உற்பத்தி பாதிப்பு
இதனால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு இல்லாத நிலையும் ஏர்பட்டது. மக்களும் மகிழ்ந்தனர். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் மின்வெட்டு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது
தமிழகத்தில் உள்ள பல்வேறு மின் உற்பத்தி நிலையஙக்ள் பழுதடையத் தொடங்கியுள்ளதாலும், காற்றாலை மின்சாரம் சுத்தமாக நின்று போனதாலும் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டு
தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலாகி வருகிறது. குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
புதிய மின் திட்டங்கள் எதுவும் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. பல புதிய மின் உற்பத்தி நிலையங்களில் இன்னும் சோதனை ஓட்டமே நடந்து வருவதால் அவற்றிலிருந்து மின்சாரம் கிடைக்கும் வழியைக் காணோம்
தூத்துக்குடி அனல் மின்நிலையம்
தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்திநன் உற்பத்திப் பிரிவுகள் அடுத்தடுத்து பழுதாகி வருவதாலும் மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் தரப்டாத காரணத்தாலும் மின்வெட்டு மேலும் அதிகரித்து மோசமடையும் என்று தெரிகிறது.
ஏமாற்றிய பருவமழை
கூடங்குளம் மின் நிலையம் இயங்கத் தொடங்கி விட்டதாக கூறப்பட்டாலும், அதனால் தமிழகத்திற்கு இதுவரை எந்தவித உபயோகமும் கிடைத்தது போலத் தெரியவில்லை.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சரிவர பெய்யாமல் போனதும் கூட மின் உற்பத்தி குறைந்ததற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
முடங்கிய தொழில்கள்
காற்றாலையில் மின் உற்பத்தியின் சரிவு காரணமாக, தமிழகத்தில் மின் பற்றாக்குறை, 1,580 மெகாவாட் அதிகரித்துள்ளது. தினமும், ஒரு மணி நேரம் என்று இருந்த மின்தடை, தற்போது படிப்படியாக உயர்ந்து, நகர பகுதியில் தினமும், 6 மணி நேரத்துக்கு மேல் மின்தடை செய்யப்படுவதால் தொழில்கள் முடங்கியுள்ளன.
ஏற்றுமதி தொழில் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இங்கு ஸ்க்ரீன், தலையணை உறை, மேஜை விரிப்புகள், கைகுட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் 3,500 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. மின்தடையால் இந்த தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவையில் குறுந்தொழில்கள்
கோவை அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் மட்டும் இந்த மின்தடையால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் மத்தியில், கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. பம்பு செட் தொழில் துறையினருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, 15 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
கோவை அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தொழில் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் மட்டும் இந்த மின்தடையால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் மத்தியில், கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. பம்பு செட் தொழில் துறையினருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, 15 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
பின்னலாடைத் தொழில்கள்
பின்னலாடை தொழிலில் முன்னணியில் இருக்கும் திருப்பூரில், சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தொழில் சூடு பிடித்துள்ளது. நிறுவனங்கள், முழு அளவில் இயங்க துவங்கியுள்ளன. எங்கு பார்த்தாலும், "ஆட்கள் தேவை' விளம்பரங்கள் மீண்டும் தென்பட துவங்கியுள்ளன. இந்நிலையில், தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட துவங்கியிருப்பது, தொழில் துறையினரை, பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், பின்னலாடை "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வர்த்கம் பாதிப்பு
ஒரு நாளைக்கு, 20 மணி நேரம் இயங்கும், கம்பெனிகள், மின்தடையால் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஜெனரேட்டரை பயன்படுத்துகின்றன. இதனால், உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. வெளிநாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுவதால் ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டில் நடக்கும் விற்பனையால் ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது மீண்டும் தலைகாட்டும் மின்தடையால், இந்த வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள் முடக்கம்
கோவையில் தொடர்ந்து ஏற்படும் மின் வெட்டால், அரசு அலுவலகங்கள் பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வழக்கமான பணிகள் முடங்கி கிடப்பதோடு, பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின் வெட்டு நேரத்தில் இந்த அலுவலக பயன்பாட்டுக்கென தனி ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனரேட்டர் வாயிலாக கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பிரிவுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலகம் தவிர மாவட்ட கருவூலம், சமூக நலத்துறை உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் தனியாக உள்ளதால் அந்த அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த அலுவலகங்கள் மின்சாரம் இல்லாமல் இருளிலேயே மூழ்கி கிடக்கின்றன.
10 மணிநேரம் மின்வெட்டு
மதுரை நகரில் பகலில் 6 மணி நேரமும், புறநகரில் 10 மணி நேரமும் சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. தவிர, பற்றாக்குறையின் அடிப்படையில் இரவில் நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு முதல் மூன்று மணி நேரமும் மின் வெட்டு உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நகர்பகுதிகளில் 6 மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 8 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய பகுதிகளுக்கு மூன்று மணிநேரத்திற்கும் குறைவாக மும்முனை மின்சாரம் கிடைப்பதால், மோட்டார்கள் இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பஞ்சாலை, அட்டைபெட்டி தயாரித்தல், மரஅறுவை, அரிசி, மாவு அரைக்கும் தொழில், பால், ஐஸ்கிரீம், குளிர்பான வியாபாரம், தொழில் பேட்டையில் உள்ள சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
விசைத்தறிகள் பாதிப்பு
தேனி, ஆண்டிபட்டி, போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 500 விசைத்தறிகள் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேவாரம் பகுதியில், கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்படுகிறது.
அரிசி ஆலைகள் தவிப்பு
மாவட்டத்தில், தினமும் 5 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. சிங்கம்புணரி பகுதியில், கயிறு, எண்ணெய் உற்பத்தி, பிளாஸ்டிக் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி, புதுவயல் அரிசி ஆலைகளில், மின்வெட்டால், அரிசி உற்பத்தி குறைந்து விட்டன. "பேப்பர் கப்' பாக்கு மட்டை தட்டு, பேவர் பிளாக் கல் தயாரிப்பு போன்ற தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயமும் அடியோடு படுத்து விட்டது.
மீன் பதப்படுத்தும் தொழில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறரை மணிநேரமும், கிராமப்பகுதிகளில் 8 முதல் 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. சிறுதொழில், மீன்பதப்படுத்தும் மற்றும் ஐஸ்கட்டி கம்பெனிகள் உட்பட அனைத்து தொழில்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
தீப்பெட்டித் தொழில்
விருதுநகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில், ஆறு மணி நேரம், கிராமப்பகுதிகளில் எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது. விருதுநகரில் எண்ணெய் மில்கள், சிவகாசியில் அச்சுத்தொழில், சாத்தூரில் தீப்பெட்டி தொழில், ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் விசைத்தறி, தளவாய்புரத்தில் ஆடை தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பாத்திரம் பாதிப்பு
நெல்லை மாநகரில் பழைய பேட்டை, டவுனில் வெண்கலம், பித்தளை பாத்திரம் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு பொங்கலை கருத்தில் கொண்டு, பொங்கல் பானை, கொப்பரை, விளக்கு, குடம், தட்டு உள்ளிட்ட வெண்கல மற்றும் பித்தளை பொருட்களை தயாரிக்க வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். சீர்வரிசை கொடுப்பதற்காக பொதுமக்களும் நேரடியாக ஆர்டர் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போது 8 மணி நேரம் மின்வெட்டு நீடிப்பதால், ஆர்டர்களுக்கு ஏற்ப பொங்கல் பாத்திரங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
நீலகிரி, சேலம்
ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், சேலம் மாவட்டத்திலும் மின் வெட்டு இல்லை. மற்ற எல்லா மாவட்டங்களிலும் மின் வெட்டு கடுமையாக உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதற்கும் நாளொன்றுக்கு, 75 மெகாவாட் மின்சாரமே தேவைப்படுகிறது. குளிர் பிரதேசம் என்பதால், மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு மின் பயன்பாடு குறைவு. அதேபோல் சென்னையில் தினமும் 6 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட வில்லை என்பது சென்னைவாசிகளுக்கு ஆறுதலான விசயமாக உள்ளது.