கரண்ட் கட்... ரோஸ்ட் ஆன சென்னைவாசிகள்... - கவர்மெண்ட் பியூஸ் போயிருச்சே!
விடிய விடிய கரண்ட் கட்... ஃபேன் ஓடலை, ஏசியில்லை... சென்னைவாசிகள் வியர்வை புழுக்கத்தில் தூக்கம் வராமல் தவித்துள்ளனர். டுவிட்டரில் சென்னை பவர்கட் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது.
சென்னை: சென்னையில் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. கடந்த இரு தினங்களாக பகல் நேரத்தில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்ட மின்சாரம் இப்போது இரவு நேரங்களில் முழுமையாக நிறுத்தப்படுகிறது. நேற்றிரவு மின்வெட்டு பிரச்சினையால் தூக்கத்தை தொலைத்தனர் சென்னைவாசிகள்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே, மாநிலம் முழுவதும் அணைத்து நகரங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் கூட வெயிலின் வீச்சு அதிகமாகவே உள்ளது. இரவில் புழுக்கம் அதிகரித்து வருகிறது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான வெட்கை மற்றும் கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.
முடங்கிப் போன அரசு
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழக அரசு முடங்கிப் போய் விட்டது. அமைச்சர்களுக்கு கோஷ்டிகளை இணைக்கும் பேச்சுவார்த்தை நடத்தவே நேரம் போதவில்லை. இந்த லட்சணத்தில் மின் வெட்டு பிரச்சினையும் தலைதூக்கி விட்டது. ஆனால் பிரச்சினையை தீர்க்காமல் மூடி மறைக்கின்றனர் அமைச்சர்கள்.
|
தூக்கம் தொலைத்த மக்கள்
நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம்., அண்ணா நகர், நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வரும் மின் தடையால், இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். விடிய விடிய தூக்கத்தைத் தொலைத்து கொஞ்ச நஞ்ச பேட்டரி சார்ஜ் ஐ வைத்து டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் மின்வெட்டு கொடுமையை பதிவிட்டு ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.
|
பியூஸ் போயிருச்சு
சென்னையில் மின்வெட்டு என்று ஒருவர் பதிவிட்டால், தம்பி தமிழ்நாடு கவர்மெண்ட் பியூஸ் போயி ரொம்ப நாள் ஆச்சு என்று டுவிட்டரில் கமெண்ட் அடித்தார் ஒரு வலைஞர். 2016 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு மே மாதம் பதவியேற்றது. 3 மாதம் கூட அரசு முழுவதுமாக இயங்கவில்லை. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அனைவரும் மருத்துவமனையில் தவமிருந்தனர்.
பேச்சுவார்த்தைதான்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஒபிஎஸ் பதவியேற்றார். இரண்டு மாதத்தில் அவர் ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவரது பதவியும் நித்ய கண்டம் பூரண ஆயுசாக மாறி வருகிறது. இப்போது அமைச்சர்கள் வீட்டில் விடிய விடிய பேச்சுவார்த்தைதான் நடைபெறுகிறது. அரசை கவனிக்காமல் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்களோ? அரசாங்கத்தை எப்போது இயக்குவார்களோ என்பதே மக்களின் கேள்வி.