தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 48 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும்: ரமணன்
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளதாவது:
வங்கக் கடலில் ஞாயிற்றுக் கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த பகுதியாக உள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தென் கேரள கடற்கரையோரத்திலிருந்து வடக்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில், வட கேரளம் அருகே உள்ளது. இது மேலும் தீவிரமாகி வட கிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையோரத்தில் கடல் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் தொடர்மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, களக்காடு, முக்கூடல் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,219 கன அடியும், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 669 கன அடியும், கடனாநதி அணைக்கு வினாடிக்கு 25 கன அடியும், ராமநதி அணைக்கு வினாடிக்கு 106 கன அடியும், நீர்வரத்து இருந்தது.
உயரும் நீர்மட்டம்
அணைகளுக்கு நீர்வரத்து இருப்பதால் குறைந்த கொள்ளளவு உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 61 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 45.28 அடியாகவும், 36 அடி கொள்ளளவு உள்ள குண்டாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 32.47 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 40 அடியாகவும் இருந்தது. வறண்டு காணப்பட்ட வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 7 அடியும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஓரடியும் உயர்ந்துள்ளது.
அருவிகளில் வெள்ளம்:
மணிமுத்தாறு, பாபநாசம், பாபநாசம் கீழ் அணை பகுதிகளில் மழை நீடிப்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் 2 வதுநாளாக வியாழக்கிழமையன்றும் வெள்ளப்பெருக்கு இருந்தது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியில் 4 கிளையிலும் தண்ணீர் விழுகிறது.
குடிநீர் பஞ்சமில்லை
அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருப்பதால் ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யலாம் என, அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதிகபட்சம் ராமநாதபுரம்
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 13 செ.மீ. மழை பெய்தது. சிதம்பரம், குன்னூர் ஆகிய இடங்களில் 12 செ.மீ., கமுதி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 11 செ.மீ., கொடவாசல், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications