தி.நகர் வாசிகளை அச்சுறுத்தும் சுவாச கோளாறு... கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை
பயங்கர தீவிபத்தில் சிக்கியுள்ள சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தி.நகர் பகுதி மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
சென்னை: தீவிபத்தில் சிக்கி எரிந்து இடிந்து விழுந்து கொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் இரண்டாவது நாளாக தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதிவாழ் மக்கள் சுவாச கோளாறால் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிபத்து பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தீ விபத்தால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. யாரேனும் சுவாசிக்க முடியாமல் தவித்தால் அவர்களை உடனே, இங்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சைக்கு அனுமதித்துக்கொள்ளலாம்.
24 மணிநேர சிகிச்சை
24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள், குழந்தைகள்
குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் சென்னை சில்க்ஸ் பகுதியைச் சுற்றி 500மீட்டர் தூரத்துக்கு வருவதை நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். சுவாசக்கோளாறு நெஞ்செரிச்சல் உபாதைகளால் யாரேனும் அவதிப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
உடனடி சிகிச்சை
சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் வாசிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எந்த உடல் நல பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
சுவாச சிகிச்சை
மூச்சுத்திணறல் ஆஸ்துமா பாதிப்புள்ள நபர்களுக்கு இருக்கும். அதனால் அவர்கள் உடனே மருத்துவ மையங்கள் வந்து செயற்கை சுவாச சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்." என்று தெரிவித்தார் அமைச்சர்.