‘ஓபன் தி பாட்டில்’ பாடல் படத்திற்கு வரிவிலக்கு... மூடு டாஸ்மாக் பாடலுக்கு கைது: பிரேமலதா
ஈரோடு: தமிழக அரசு ‘‘மச்சி ஓபன் தி பாட்டில்'' என்கிற பாடல் இடம்பெற்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது' என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தமிழக அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் ‘மக்களுக்காக மக்கள் பணி' என்ற பெயரில் மாவட்டந்தோறும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தேமுதிக நடத்தி வருகிறது.
அந்தவகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டனர். விழாவில் ஏழைப்பெண்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
இட ஒதுக்கீடு...
பெண்கள் சக்தியின் வடிவம். எனவேதான் நமது தலைவர் விஜயகாந்த் கட்சியை தொடங்கியபோது நிர்வாகிகள் பதவியில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார்.
மாற்றம் தேவை...
தேமுதிக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 50 சதவீதம் சரிசமமான உரிமை வழங்கப்படும். இது 50 ஆண்டு கட்சியான திமுகவிலோ, 40 ஆண்டு கட்சியான அதிமுகவிலோ கிடையாது. எனவே வரப்போகிற தேர்தலில் தமிழ்நாட்டில் பெண்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
நலத்திட்ட உதவிகள்...
அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகிறார்கள். எனவேதான் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிற வகையில் நலத்திட்ட உதவிகளை தலைவர் விஜயகாந்த் வழங்கி இருக்கிறார்.
உங்கள் வீட்டுப்பிள்ளை...
நம்முடைய சின்னகவுண்டர் உங்கள் முன் அமர்ந்து இருக்கிறார். அவர் உங்கள் தலைவராக, தோழராக உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பார். எனவே உறுதியோடு கூறுகிறேன்.
விஜயகாந்த் வாழும் பெரியார்...
வருகிற தேர்தலில் மாற்றம் ஏற்படும். நமது ஆட்சி மலரும். பெண்கள் சமஉரிமை பெற நம்முடைய ஆட்சி மலரவேண்டும். இது பெரியார் பிறந்த பூமி. பெண்களுக்கு முழு உரிமை கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அவருக்கு பின்பு வாழும் பெரியாராக நமது தலைவர் கேப்டனை பார்க்கிறேன்.
கோவன் கைது...
டாஸ்மாக் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாபக்கேடாக உள்ளது. ‘‘மச்சி ஓபன் தி பாட்டில்'' என்கிற பாடலின் திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கிறது. ஆனால் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மலிந்து உள்ளது.
பயப்பட வேண்டாம்...
இந்தநிலையில் அதிமுகவினரின் அச்சுறுத்தலுக்கு தேமுதிகவினர் யாரும் பயப்பட வேண்டாம். நம்முடைய தலைவர் ஆண்டவனுக்கு மட்டும்தான் பயப்படுவார். நம்முடைய தலைவர் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். கட்சியும் அதுபோலவே. தொண்டர்களாகிய நீங்களும் எதிர்ப்புகளை கடந்து வளரவேண்டும்.
ஆளும் கட்சியாவோம்...
2005-ல் நாம் புதுக்கட்சி, 2011-ல் எதிர்க்கட்சி, 2016-ல் நாம் தான் ஆளும் கட்சி. நம் முரசு நாளைய தமிழக அரசு' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.25 லட்சம் நலத்திட்ட உதவி...
இந்த விழாவில் 11 ஏழைப்பெண்களுக்கு ஆட்டோ, 10 பெண்களுக்கு மாவு அரைக்கும் எந்திரம், 10 பேருக்கு தள்ளு வண்டி, 10 பேருக்கு கணினி, 10 பேருக்கு தராசு எந்திரம், 100 பேருக்கு தையல் எந்திரம் உள்பட மொத்தம் 151 பேருக்கு ரூ.25 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.