சென்னை குண்டுவெடிப்பு மோடியை குறிவைத்தா? ஐ.ஜி மகேஷ் விளக்கம்
சென்னை: சென்னை இரட்டை குண்டுவெடிப்பானது பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இலக்கு வைத்து நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கவுகாத்தி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் நேற்று இரவு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் சராமரியாக கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அவர், மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து குற்றவாளி கைது செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட்டபிறகுதான் சொல்ல முடியும் என்றார்.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர்உசேனுக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்விக்கு இதுவரை நடந்த விசாரணையில் அது போன்ற தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் மதுரையில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுக்கும் , பெங்களூரில் வெடித்த குண்டுக்கும், தற்போது ரயிலில் வெடித்த குண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றும் ஐ.ஜி. மகேஷ்குமார் தெரிவித்தார்,