ஆசிரியரை தாக்கிய வழக்கு: மாணவனின் தந்தை அருளானந்தம் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உடற்கல்வி ஆசிரியரை அடியாட்களை வைத்து தாக்கிய வழக்கில் திருச்சியில் கைதான முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் அருளானந்தம் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4-வது குறுக்கு தெருவில் உள்ள லயோலா மெட்ரிக் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பாஸ்கர்ராஜ் பணிபுரிந்து வருகிறார். வகுப்பறையில் விசிலடித்த மாணவனை உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் ராஜ் கடந்த வாரம் தலையில் குட்டியுள்ளார். இதையடுத்து, ஒரு கும்பல் பள்ளியில் புகுந்து அந்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து ரவுடி கும்பலை கைது செய்யக் கோரி பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்தது.
மாணவனின் தந்தையான தொழிலதிபர் அருளானந்தம் தூண்டுதலின் பேரில் தான் ஆசிரியர் தாக்கப்பட்டார் என்றும், அருளானந்தத்தின் கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆசிரியர் தாக்கப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தன. இதைவைத்து, அடியாட்களை ஏவி ஆசிரியரை தாக்கியதாக, தொழிலதிபர் அருளானந்தம் மற்றும் சிலர் மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அருளானந்தம் நடத்தும் ரிச் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அருளானந்தம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 2 தனிப்படையினர் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேடினர். அருளானந்தத்தின் உறவினர்கள் திருச்சியில் உள்ளனர். எனவே அங்கு ஒரு தனிப்படை போலீசார் விரைந்தனர்.
திருச்சியில் பதுங்கியிருந்த அவரை கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இரவோடு இரவாக அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் அருளானந்தம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அருளானந்தம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அருளானந்தம் அடைக்கப்பட்டார்.
ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் இவருடன் சேர்த்து இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருளானந்தத்தின் சகோதரர் செபஸ்டினை போலீசார் தேடி வருகிறார்கள்.