பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சலிங்கே வேண்டாம்.. ஹைகோர்ட்டுக்கு போன தனியார் கல்லூரிகள்
பொறியியல் படிப்பிற்கு கலந்தாய்வு முறையை ரத்து செய்து கல்லூரிகளே மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி கோரி தனியார் கல்லூரிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளன.
சென்னை : பிஇ கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு கல்லூரிகளே மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தனியார் கல்லூரிகள் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
தமிழகத்திலுள்ள தனியார் பொறியியல் இடங்களை கலந்தாய்வு இல்லாமல் தாங்களே நிரப்பிக் கொள்ள அனுமதி கோரி தனியார் கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. 65 சதவீத அரசு ஒதுக்கீடு இடங்கள் இருப்பதால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக கல்லூரிகள் மனுவில் கூறியுள்ளன.
அரசு ஒதுக்கீட்டிற்கான கட்டணத்தையே பெற்று இடங்களை நிரப்பு அனுமதி அளிக்க வேண்டும். நெல்லையைச் சேர்ந்த ஜலீல் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள பொறியியல் படிப்பிற்கான இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் கலந்தாய்வு முறையில் சேர்க்கப்படுகின்றனர்.
எஞ்சிய 35 சதவீத இடத்தை கல்லூரிகள் மேனேஜ்மெண்ட் கோட்டா என்ற முறையில் மாணவர்களை சேர்த்து வருகிறது. மேனேஜ்மெண்ட் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் அதிக நன்கொடை பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தனியார் கல்லூரிகள் நீதிமன்றத்தில் அனைத்து இடங்களையும் தாங்களே நிரப்பிக் கொள்ள அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.