திருகுறுங்குடி கோவிலுக்கு செல்ல தனியார் பஸ்களுக்கு திடீர் தடை.. பக்தர்கள் அவதி
திருகுறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல தனியார் வேன், பஸ்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
நெல்லை: திருகுறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல தனியார் வேன், பஸ்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருங்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் நம்பி கோயில் உள்ளது. 108 வைண தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமை உறியடி திருவிழா நடப்பது வழக்கம்.
தமிழ் மாத கடைசி சனி கிழமைகளில் கூட்டம் அலைமோதும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். வடமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் சிறப்பு நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
மற்ற சிறப்பு நாட்களில் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இந்தகோயில் திருக்குடியில் இருந்து நம்பி கோயில் 8 கிமீ தொலைவில் உள்ளது. கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறை சோதனை சாவடி முதல் 4 கிமீ வரை சாலை வசதி உள்ளது. இந்த 4 கிமீ வரை தனியாருக்கு சொந்தமான ஜீப்களில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக நம்பி கோவிலுக்கு வனத்துறையினர் தனியார் ஜுப்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் குழந்தைகளுடன் கோயிலுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் ஜூப்களை இயங்கி வரும் பல நூறு டிரைவர்களும் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.